முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...
உணவின் அவசியம் மற்றும் தேவைகள் நாட்டில் அதிகரித்து வருகின்ற பொழுதும் இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிக வருத்தப்பட கூடியது. உலக நாடுகளில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்தாத நாடாகதான் இன்றும் இருக்கின்றது. நான் படித்த வரலாற்று பாடங்களில் அந்த அரசன் கோவில் கட்டினான், இந்த அரசன் குளங்கள் வெட்டி அணைகள் கட்டினான் என்றுதான் படித்துள்ளேன். ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு தொலை நோக்கு திட்டங்கள் இன்று நடந்துக்கொண்டு உள்ளது. அந்த கால அரசர்கள் மக்களை சுறுசுறுப்புடன் வைத்திருந்து வேலைகளை கொடுத்து கூலியும் அதற்காக உணவும் கொடுத்தான் என்பதுதான் வரலாறு. குளங்கள் தூறு வாருதல், சாலைகள் அமைத்தல், சாலையோரம் மரங்கள் நடுதல் போன்ற வேலைகளை கொடுத்து மக்களுக்கு உணவளித்தான். இன்று கிட்டதட்ட 20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான விடயம். மக்கள் தொகை அதிகரிப்பு, நலிந்து வரும் விவசாயம் போன்றவைகள் நாளை உணவின் பற்றாகுறை மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதுதான் உண்மை. இனிமேலும் இதனை கவணிக்காமல் விட்டுவிட்டால் ஒரு பெரிய வறட்சியை பார்க்க வேண்டி வரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை.

தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபெரும் வளர்ச்சி. காடுகளை அழித்து குளங்கள் வெட்டி நாடாக்கினான் என்பது வரலாறு. வயல்காடுகளை அழித்து துண்டுப்போட்டு வீட்டு மனையாக்கி காசாக்கியதுதான் இன்றைய நிலை. பல ஏரிகள் குப்பை காடாக காட்சியளிக்கும் நிலை.
ஒரு வேளை உண்பவன் யோகி (யோகம் பன்னுகிறவன்),... இரு வேளை உண்பவன் போகி,... முன்று வேளை உண்பவன் ரோகி (நோயுடையவன்),... என்பார்கள். உணவின் தேவைகள் அப்படி அதேபோல் உணவின் அவசியம் அப்படி. எல்லா உயிர்களுக்கும் இயற்கையே உணவழிக்கும் என்றாலும் அப்படி இயற்கையால் உணவழிக்க முடியாத சுழல் வந்தால் இயற்கையே உயிர்களை சமன் செய்துவிடும். அப்படிதான் உயிரை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தன காலரா, மலேரியா, அம்மை போன்ற நோய்கள். இவற்றிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கற்றுகொண்டான் ஆனால் இன்னும் உணவிற்கான சமன்பாட்டை கற்றுகொள்ளவில்லை. மாறிவரும் சூழல்களில் பட்டினிசாவுகள் அதிகரிக்கின்றன.
மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் போயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றியினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை. இதுபோன்ற மரபணு பின்னனியில் சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்துகள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
முன்பெல்லாம் நெல் விளைச்சல் 10 மாதம் முதல் ஒரு வருடம்வரை கால வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றைய நிலை பல ரக நெல்மணிகள் வந்துள்ளது. மரபணு மாற்றம் பயனாக குறைந்த பச்ச நாள் 60 முதல் 80 நாட்களின் முழு வளர்ச்சியை பெறுகின்றது. அதே போல்தான் பழங்களும் விரைவாக பழுக்க பல ரசாயண முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் நோய்க்கு அழாக வேண்டிய நிலையுள்ளது.
"உழுதவன் கணக்கு பார்த்தால் ஒழக்கு கூட மிஞ்சாது" என்பது பழமோழி. அந்த அளவிற்கு லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் உணவுக்காக அன்னிய நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைதான் வரும். இதற்கு முக்கிய பிரச்சனை நீர் பங்கீடு , வேலை செய்ய ஆள் இல்லா பற்றாகுறை. அதன் பின் கொள்முதலில் குறைபாடுகள். இதனால் இன்னும் நான்கு ஐந்தாண்டுக்களில் அரசிடம் உள்ள உணவு கையிருப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் யோசிக்க வேண்டிய நிலை.
விவசாயச்துறையில் இந்தியா விஞ்ஞானத்துவத்தில் பின் தங்கியுள்ளது. இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது நாம் 30 வருடம் பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வல்லரசு கனவில் இருக்கின்றோம். விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.
மேலும் பசி மற்றும் உணவின் தேவைகளையும், உற்பத்திகளையும் பின் வரும் இடுகையில் பார்க்கலாம். உங்களின் ஆலோசனைகள் பின்னூட்டத்தில் எதிர்ப்பார்க்கின்றேன்.
அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
