_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

இவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்

Friday, February 5, 2010

மனிதனைத்தேடி.........

மனிதனைத்தேடி.........


மனிதன் கவுளை சார்ந்து வாழப் பழகிக்கொண்டானா? இல்லை கடவுள் மனிதனை சார்ந்துள்ளதா? இதன் பதில்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றது. பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற சமய நூல்களும் அறநூல்களும் மனிதனை நெறிப்படுத்த தொகுக்கப்பட்டவைகள்தான்.

ஒருவனுக்கு நல்ல வெளிநாட்டு நிருவணத்தில் வேலைக்கிடைக்கின்றது. அதன் மகிழ்ச்சியை வணங்கிய இறைவனிடம் பகிர்ந்துக்கொள்கின்றான். "சர்வ வல்லமைப்படைத்த இறைவா எனக்கு கணனி பற்றிய அறிவும் எனக்கில்லை, வேலையை பற்றிய அனுபவமும் எனக்கில்லை இருந்தாலும் இந்த வேலை எனக்கு கிடைக்கும் என்று உம்மையையே நம்பியிருந்தேன். எனது நம்பிக்கையும் உன் ஆசிர்வாதமும் இருந்ததால் அந்த வேலை எனக்கே கிடைத்தது" என்று சொல்லி நன்றியை கடவுளிடம் ஆணந்த கண்ணீருடன் சொல்லியுள்ளான். ஆம் கடவுளின் கருணையிருந்தால் எல்லாம் நடக்கும்.......
மனிதன்: எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவனுக்கு தன்னை விசுவாசிக்கின்றான் என்ற ஒரு காரணத்தால் அந்த வேலையை அவனுக்கே கொடுக்கும் இறைவனை என்ன சொல்ல வேண்டும்? எல்லா தகுதியும் இருந்தும் தன் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் நம்பி வந்த ஒருவனுக்கு அந்த வேலை பறிக்கப்படுவதை என்னவென்று சொல்வது?... உங்களின் வாக்கின்படி இப்படிப்பட்ட இறைவன் ஞாயமற்றவரா இருக்கின்றாரா?.

தன் மகன் நோயினால் அவதிப்படுகின்றான், மருத்துவரிடம் அழைத்துச்செல்ல அவனிடம் காசு இல்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்க்கின்றான் காசு கிடைக்கவில்லை. தன் மகனின் நிலையை பார்த்து கண்ணீருடன் "இறைவா என் மகன் நோயினால் அவதிப்படுகின்றான் என்னிடம் காசு இல்லை எப்படியாவது மருத்துவரிடம் அழைத்துச்செல்ல காசு கொடுக்கவும்" என்று வேண்டுகின்றான். கடைசியில் மகன் இறந்துவிடுகின்றான்.

சார்வ வல்லமைப் படைத்த இறைவனிடம் "என் மகனை குணப்படுத்து இறைவா" என்று விசுவாசத்துடன் அவன் வேண்டியிருந்தால் அவனின் விசுவாசம் குணப்படுத்திருக்கும். ஆனால் அவனோ இறைவா எனக்கு காசுகொடு என்று வேண்டி தன் மகனையே இழந்துவிட்டான்.... உண்மையான விசுவாசிகளை கடவுள் கைவிடமாட்டார். அவனின் விசுவாசம் அவன் மகனை காப்பாற்றவில்லை.
மனிதன்: சர்வ வல்லமைப் படைத்த இறைவன் ஏன் அவன் மகனுக்கு நோயைக் கொடுக்க வேண்டும்?

பகவத் கீதையை படித்தறிந்த ஒருவன் தான் படித்தவற்றை அரசனிடம் விளக்கி சொன்னால் அரசன் காசுக்கொடுப்பான் என்று அரசனிடம் செல்கின்றான். அரசனிடம் சென்று " மன்னா நான் பகவத் கீதையை நன்றாக படித்துணர்ந்தவன் நான் உங்களுக்கு அவற்றை பற்றி விளக்கி சொல்கின்றேன்" என்றான். அரசன் அவனை பார்த்து " உன்னை பார்த்தால் நன்றாக படித்தவனாக தெரியவில்லை மீண்டும் நன்றாக படித்துவிட்டு வா! பின்னர் உன்னிடம் கேட்கின்றேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவனும் வேறு வழியில்லாமல் மீண்டும் கீதையை படிக்கின்றான்... பின்னர் ஒரு நாள் அரசனிடம் சென்று கேட்டான் அன்றும் அரசன் அதேதான் சொல்லி அனுப்பிவிட்டார். அவனோ சலிக்காமல் மீண்டும் பகவத் கீதையை படிக்கின்றான். இப்படியாக மூன்று நான்குமுறை படித்த பின் கீதையை உணருகின்றான். இப்பொழுது அவனுக்கு கீதையைப்பற்றி உணர்வு நன்றாக இருக்கின்றது ஆனால் அவன் அரசனிடம் செல்லவில்லை... நீண்ட நாள்களுக்கு பின் அரசனுக்கு நினைவு வருகின்றது.. தன்னிடம் மூன்று நான்கு முறை வந்து கீதைப்பற்றி விளக்க வந்தவர் ஏன் காணவில்லை என்று தேடி அவன் இருப்பிடம் செல்கின்றான். அரசன் அவனை வணங்கி " நீங்கள் எனக்கு கீதையைப்பற்றி விளக்கம் சொல்லிக்கொடுங்கள்" என்று கேட்கின்றார்..

பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவற்றில் சொல்லப்பற்றிருக்கும் நீதிகளை ஒருவன் படித்துணர்ந்தால் பொருளை பற்றிய ஆசை, புகழைப் பற்றிய ஆசை, பதவியை பற்றி ஆசையில்லாதவனாக இருப்பான். அப்படிப்பட்ட நிலைதான் பற்று அற்ற நிலை. அந்த நிலையை அவன் உணர்ந்ததால்தான் கடைசியில் அவன் அரசனின் காசுக்காக மீண்டும் செல்லவில்லை. அந்த நிலையை அறிந்ததால் அரசனும் அவனிடம் வந்து கீதையைப்பற்றி விளக்கம் கேட்டார்.

மனிதன்: அந்த பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்... கடவுளை தேடி நீ எங்கேயும் செல்ல தேவையில்லை உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாளே நீயே கடவுள்தான். இதைதான் மத நூல்களும், அறநூல்களும் சொல்கின்றது. அதை உணராத மனிதன்தான் பொருளுக்காக, புகழுக்காக, பதவிக்காக தேடித்தேடி எங்கேயோ அழைகின்றான். உனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்தால் நீயே அந்த நாடகத்தின் நாயகனாக இருப்பாய். நீ தேடிப்போகும் இறைவன் உனக்கு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்தாளே நீயே மனிதனாவாய். மகனாக மகளாக, தாயாக தந்தையாக, தாத்தா பாட்டியாக.... இப்படி கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து எவன் நடக்கின்றானோ...... அவனே இறைவன்!...... அவனே மனிதன்!....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்...


Tuesday, February 2, 2010

கடவுள் வாழ்கின்றார் (றா?)

கடவுள் வாழ்கின்றார் (றா?)


ஆதி மனிதன் கொண்டுவந்த எத்தனையோ பழக்கங்கள் நம்மை விட்டு விழகினாலும், கடவுளும் கடவுளைப்பற்றிய நம்பிக்கையும் நின்றுவிடவில்லை. உண்மையில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? ம்ம்ம்ம்... இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். இதன் தொடர்புள்ள மற்றொரு என் இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...

மெற்கண்ட சுட்டியையும் படித்துவிட்டு வந்திருப்பீர்கள், நீங்களே சொல்லுங்கள் கடவுள் வாழ்கின்றாரா? இல்லையா? அதற்கு முன் எல்லொருக்கும் தெரிந்த ஒரு சிறிய கதை. ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்கு சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. குரு தம் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்றார். அப்பொழுது சீடர்களிடம் சில அறிவுரைகளையும் சொல்கின்றார். " நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வைக்கவேண்டும் ஏனெனில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார் எனவே அந்த உயிர்களிடம் அன்பு வைப்பவர்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருப்பார்கள்" என்றார். சீடர்களும் தங்களுக்கு தெரிந்தவரை தலையை ஆட்டிவைத்தார்கள். குருகுலத்திலிருந்து கோவில் சிறிது தொலைவில் இருந்தது. சீடர்கள் அனைவரும் காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்கின்றார்கள். அப்பொழுது எதிரில் ஒரு யானைப்பாகன் " ஓடுங்கள்... ஓடுகங்கள் யானை மதம் கொண்டு வருகின்றது " என்று சொல்லிக்கொண்டே ஓடுகின்றான். எல்லா சீடர்களும் அதை கேட்டதும் ஓடிவிடுகின்றார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஓடாமல் இருந்தான், மதம் கொண்ட யானையும் வந்தது யானை அவனை ஒரு சுற்று சுற்றி வீசி எரிந்தது.

மயக்க நிலையில் அவனை மற்ற சீடர்கள் தம் குருவிடம் தூக்கி சென்றார்கள். குருவும்
அவனுக்கு வைத்தியம் செய்தார், அவன் மயக்க நிலை தெளிந்ததும் குரு அவனிடம் " யானை வருவதை அறிந்ததும் எல்லா மாணவர்களும் ஒடிவிட்டார்கள் ஏன் நீ மட்டும் ஓடவில்லை" என்று கேட்டார். அவன் " குருவே நீங்கள்தான் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வாழ்கின்றார் அவைகளிடம் அன்பு செய்யுங்கள் என்று சொன்னீர்கள் அதுதான் நான் ஓடவில்லை" என்றான்.... அதற்கு குரு " யானை பாகன் எச்சரிக்கை செய்தான் இல்லையா! அவனிடத்திலும் கடவுள் இருக்கின்றாரே, ஏன் அவன் சொல்வதை ஏற்கவில்லை" என்று கேட்டார்.

மேற்கண்ட கதையில் இப்படியும் சொல்லலாம்: "இருக்கின்ற கடவுள் அந்த யானைக்கு மதம் பிடிக்காமல் வைத்திருக்கலாமே?"

அதேபோல் கடவுளின் நம்பிக்கையில் இருக்கும் வாதங்கள் நின்றுவிடவில்லை. வாதங்களில் எந்த அளவிற்கு உண்மை உணரப்படுகின்றதோ. அந்த அளவிற்கு எதிர்வாதங்களிலும் உண்மை இருக்கதான் செய்கின்றது. வெறும் வாத சாட்சியங்களை வைத்துக்கொண்டு கடவுள் வாழ்கின்றார் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என்னை பொருத்தவரை மனிதனின் தேடல்களும் ஆசைகளும் இருக்கும் வரை கடவுளின் மேல் இருக்கும் நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.

"நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதால் அங்கு எதுவும் இல்லை என்று சொல்லவும் முடியவில்லை. நாம் நம்புவதால் இல்லாத ஒன்று இருக்கு என்றும் சொல்வதிற்கில்லை".... காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Thursday, January 28, 2010

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

பல் போனால் சொல் போச்சுனு சொல்லுவாங்க, ஆமாம் "சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!.... தமிழ் இலக்கணத்தில் சொல் என்பதை "ஒரு பொருளை கூறும் மொழிக்கூறு" என்று சொல்லுவதுண்டு. அதேபோல் சொல் என்பது ஒரு ஒலி வடிவம். இந்த ஒலி வடிவம் வாய்வழியில் உருவாகி காதுகளால் உணரப்படுகின்றது. அப்படியானால் மொழி என்பது என்ன? ஒலியையும் சைகைகளையும் மூலகூறுகளாக கொண்ட இலக்கணங்கள் அடங்கிய சொற்களை மொழி என்று கூறலாம்.

ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.

ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றது அல்லது பரவுகின்றது? ஒலி அலைகளாக கடக்கின்றது. அதாவது எல்லாத்திசைகளிலும் சரியான விகிதத்தில் அலைகளாக பரவுகின்றது. அந்த அலையில் வேகம் மற்றும் அதிர்வெண்ணை பொருத்து தூரம் கடக்கின்றது. ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும் ஆனால் பொருளின் தன்மைகேற்ப அதன் வேகம் குறையும் (உதாரணமாக கண்ணாடியில் ஒலியின் வேகம் குறைவு). வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.

ஒலி எவ்வாறு உருவாகின்றது? பொருள் அதிவுருவதால் ஒலி உண்டாகின்றது. முறுக்கப்பட்ட கம்பியில் உண்டாக்கப்படும் அதிர்வுகளால் வீணை மற்றும் வயலினில் ஒலி உருவாகின்றது. காற்று மூலகூறுகளில் அதிர்வால் புல்லாங்குழலில் ஒலி உருவாகின்றது. முறுக்கப்பட்ட கம்பி அதிர்வுகளை கைகளால் கட்டுப்படுத்தி இசையாக வெளியாகின்றது. காற்றின் அதிர்வை பூல்லாங்குழலின் துளைகளை கட்டுப்படுத்தப்பட்டு நாதம் உருவாக்கப்படுகின்றது.

நாம் எவ்வாறு ஒலி எழுப்பி பேசுகின்றோம்? மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம். இலக்கணவரையறுக்கப்பட்ட சொல்லை மொழி என்று சொல்லுகின்றோம். மொழியானது உயிர் மற்றும் மெய்யொலிகளால் உருவாகின்றது. இவ்வாறு ஒலி சொல்லாக மாறுவதை ஒலிமாற்றம் என்று அழைக்கப்படுகின்றது.


குரல்வளையால் உருவாக்கிய ஒலி மற்றும் சொல்லை நாம் எவ்வாறு உணருகின்றோம்? அதாவது எப்படி கேட்கின்றோம்? காதுகளால் உணரப்படுகின்றது. பாலுட்டிகளுக்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காதுகள் உள்ளது. காதினுல் இருக்கும் திரவ குடத்தில் மிதக்கும் சுருள் போன்ற அமைப்புதான் குரல்வளையில் உருவாக்கப்பட்ட ஒலி அதிர்வுகளை உணர்ந்து அதன் ஒத்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பி அதன் அதிர்வுகளை சொல்லாக மொழியாக நமக்கு மூளை உணர்த்துகின்றது.

இப்படிப்பட்ட ஒலி அதிர்வுகள்தான் நம்முடைய தொடர்பிற்கு மிகவும் பயனாக இருக்கின்றது. ஒலியின் அதிர்வுக்கு தகுந்த எழுத்துகளை உருவாக்கி எழுத்துகள் மூலமாகவும் செய்திகளை தொடர்புக்கொள்கின்றோம். மொழி என்பது தொடர்பிற்கு மட்டும் இல்லாது கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகமாகவும் இருக்கு என்பதும் உண்மை.

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........


இன்னும் செய்திகளுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Thursday, January 21, 2010

தெரியாது என....

தெரியாது என...

வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. தமிழ்மணம் விருதுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வேலை பளு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தொடர்ந்து இணையத்தில் வரமுடியவில்லை. இனி கொஞ்சம் கொஞ்சமாக வருவேன் என்று நினைக்கின்றேன்.

ஒரு செவிவழி கேட்ட கதை ஒன்னுங்க,... ஒரு இளைஞன் வேலைதேடி ஒரு பெரிய வெளிநாட்டு நிர்வாகத்திற்கு சென்றான். "அங்கு அலுவலகம் துப்பறவு பணி காலியாக இருப்பதாகவும் உடனே எங்கள் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்யுங்கள் அந்த வேலை உங்களுக்குத்தான்" என்று அங்குள்ள அதிகாரி சொன்னார். அதை கேட்டு மகிழ்ந்தான் ஆனால் தன்னிடம் மின்னஞ்சல் முகவரி மற்றும் அனுப்பும் முறையும் தெரியாததால் அலச்சியமாக இருந்துவிட்டான். அந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைத்துவிட்டது. தனது குடும்பம் வறுமையை போக்க வேறு வழியின்றி பக்கத்து ஊரில் உள்ள மலிவான காய்களை வாங்கி அவன் ஊரில் விற்றதில் லாபம் ரூ20 கிடைத்தது. இதை இன்னும் கொஞ்சம் அதிகமாக காய்கள் வாங்கி விற்றான் லாபம் அதிகமாக கிடைத்தது. காய்கள் தேவை அதிகமானதால் தானே தோட்டமும் வாங்கி காய்கள் விவசாயமும் செய்து விற்பனை செய்தான் லாபமும் அதிகமாக கிடைத்தது. இவனிடம் 300 பேர் வேலைசெய்யும் அளவிற்கு பெரிய அளவில் இவனின் வியாபரம் பெருகியது. கணக்குகள் சரிபார்க்க கணனி மற்றும் வேலையாட்களும் இருந்தார்கள்.

இந்த அளவிற்கு பெரிய வியாபாரியாக இருந்தாலும் கணனியை பயன்படுத்த தெரியாதவனாக இருந்தான். அங்கிருந்த ஒருவர் " இவ்வளவு பெரிய வியாபாரியாக இருக்கும் உங்களுக்கு கணனியை பயன்படுத்த தெரியவில்லையே" என்று கேட்டார். அதற்கு அவன் "இது தெரிந்திருந்தால் நான் இன்னும் கூட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்" என்றார்.

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....

சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம். சிறுவனாக சிறுவகளோடு விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனை பட்டத்து யானையால் மாலையிட்டு அரியணை ஏறிய இரண்டாம் நூற்றாண்டு சோழ மன்னனாவான். அப்படிப்பட்ட சிறுவன் தனக்கு தெரியாதென இருந்திருந்தால் இன்று நான்(நாம்) பார்த்த கல்லணை இருந்திருக்காது.


கல்லணை பற்றிய புகைப்படம் மேலும் இங்கே சுட்டவும்...

சுமார் 19 நூற்றாண்டுக்கு முன்னரே காவேரியின் போக்கை கட்டுப்படுத்தி அவற்றை முறையான பாசனத்திற்கு பயன்படுத்திய பாங்கு இன்றுவரை நம் அரசுக்கு தெரியாமல் இருப்பதேன்? அட அது போகட்டுங்க அந்த அணையையாவது பராமரித்து வருகின்றார்களா? என்றால் நாம் என்னதான் செய்துக்கொண்டுள்ளோம்? என்று கேட்க வேண்டியுள்ளது. கருநாடகத்தில் தண்ணீர் தரவில்லை, கேரளத்தில் தண்ணீர் தரவில்லை, ஆந்திராவில் தண்ணீர் தரவில்லை என்று அரசியல் நடந்தும் நம்ம அரசியல்வாதிகளால் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த என்ன செய்ய திட்டம் செய்துள்ளார்கள்? இங்கிலந்தை சேர்ந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் முயற்சி இல்லை என்றால் மேட்டூர் அணையையும் நாம் கண்டுருக்க முடியாது? தஞ்சை விவசாயிகளின் போராட்டமும் முயற்சியும் இல்லாது இருந்திருந்தால் மேட்டூர் அணைக்கு அனுமதிம் கிடைத்திருக்காது. நமககு தெரியாது என இருந்திருந்தால் எதையும் நாம் சாதிக்க முடியாது. தெளிவான சிந்தனையும் முறையான முயற்சியும் நமக்கு இன்று தேவை.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Monday, December 21, 2009

அன்புடன் ஆ.ஞானசேகரன்...

Photobucket

வலை நண்பர்களுக்கு வணக்கம்..
வேலையிடத்து பணியழுத்தம் காரணமாக, பல நாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை வந்தாலும் பின்னூட்டமிட இயலாத நிலைக்கு வருந்துக்கின்றேன். அதுபோல வரும் 24/12/2009 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா செல்ல இருப்பதால் (திருச்சி அண்ணாநகர்) உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நேரம் கொடுக்க முடியாமைக்கு வருத்தமே ( திருச்சி பக்கம் வந்தால் குரல் கொடுங்கள் சந்திக்கலாம்). பகிர்ந்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் மனதினுள் வந்துசெல்கின்றது.



ஆங்கில வருடப் புத்தாண்டையும் , தமிழ் வருடப் புத்தாண்டையும்.... எதிர் நோக்கியுள்ளோம்

புதுவருட வாழ்த்துப்பா

புது மகளே! வருக வருக....
காட்டாற்று வெள்ளம் போல
கரைப்புரண்டு வருக!....

வரும் முன் நிற்க,
உன் வருகையின் நிமித்தம்.....
என் நண்பனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் உறவினனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் மனைவி மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
மாறாக,....
உனக்கு மட்டுமே என் வாழ்த்துகள்!

வாழ்த்துகளோடு உன்முன்...
கனிவான எச்சரிக்கை!
பொங்கும் புதுபொழிவோடு
வருவாய் என்று தெரியும்,...
நீ! சாக்கரதை..

வெள்ளம் என்று புயல் என்றும்
உன்னை சரித்திரத்தில்
பதித்து விடலாம்....

சுனாமி என்று பூகம்பம் என்றும்
உன்னை பக்கங்களில்
நிறப்பி விடலாம்....

வந்தார்கள் சுட்டார்கள் என்றும்
உன்னைப் பற்றி
கலங்கம் படுத்தலாம்...

பசி வந்தது பஞ்சம் வந்தது என்றும்
உன் நினைவலைகளை
நசுக்கப்பட்டு விடலாம்....

நோய் வந்தது நொடி வந்தது என்றும்
உன் பெயர்மேல்
அச்சடிக்கப் படலாம்...

வாழ்த்துகள் இருந்துவிட்டு போகட்டும்
உனக்கு என் எச்சரிக்கை!....
வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்...
உன்னோடு உன் நினைவுகளும் இனிதாக
இருக்கவேண்டும்...

புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்



Saturday, December 12, 2009

நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)

நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)

ஒரு நடிகனாக தொடங்கி பின் தமிழகத்தின் முதலமைச்சராக பத்தாண்டுகாலம் அதாவது சாகும் காலம் வரை பணிசெய்து மக்கள் தொண்டனாக இருந்தவர் டாக்டர் புரட்சித்தலைவர் M.G. ராமச்சந்திரன் ஆவார். அவர் மக்களின் நாயகனாகவே இருந்தார் என்பது அவரின் வாழ்நாட்களை கவணித்தவர்கள் சொல்லிட முடியும். இவரைப்பாற்றிய என் முந்தய இடுகை நீ! ஒரு நாயகன்...

அந்த நாயகனின் வாழ்நாள் புகைப்படங்கள் சில மின்னஞ்சலின் கிடைத்தது. இந்த புகைப்படங்கள் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

பொன்மனசெம்மல்


நடிகர் திலகம் சிவாசி கணேசனுடன் MGR



AVM சரவணனுடன் MGR



கிருபாணந்தா வாரியாருடன் MGR



தனது நண்பர் டாக்டர் கலைஞருடன் MGR..


நரிக்குறவர்களுடன் MGR. "ஒளிவிளக்கு" எனற திரைப்படத்தில் நரிகுறவன் வேடம் கொண்டு நடித்து அவர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.. தனது ஆட்சிக் காலத்தில் செய்ய தவறிய ஒன்று இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு மாற்றாமல் விட்டது.



இரும்பு மனிதர் ராஜாஜியுடன் MGR

சகலகலா வல்லவர் MGR இவர் நடிகர் என்றாலும் எல்லா துறைகளிலும் திரண் கொண்டவராக இருந்தார். இவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது சத்துணவு திட்டத்தின் முன்னோடி காமராஜ் அவர்களுடன் MGR


டாகடர் கலைஞருடன் MGR


நகைசுவை மன்னன் நாகேஷ் அவர்களின் திரையரங்கம் திறப்பு விழாவில் MGR



அறிஞர் அண்ணாவுடன் MGR



கவிஞர் கண்ணதாசனுடன் MGR


சந்திர பாபுவுடன் MGR

நாகேஷ் மற்றும் அசோகனுடன் MGR



இந்திரா காந்தியுடன் MGR மத்திய அரசுடன் நல்ல இணக்கம் கொண்டவர்.


விடுதலை புலிகளின் தலைவன் வேலைப்பிள்ளை பிரபாகரனின் சந்திப்பு



மக்கள் கலைஞன் MGR


பெரியாருடன் MGR



மூத்த நடிகர், இயக்குனர் சாந்தா ராம் (ஹிந்தி) அவர்களுடன் MGR தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சரம் இவர் மூலம்தான் ஆரம்பமாகி இருக்கலாம். செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் கொடிக்கட்டி பறப்பவர்.



போப்வுடன் MGR இவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் மதத்தலைவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்.



சாண்டோ சின்னப்பத்தேவருடன் MGR


முப்பெரும் தலைவர்கள் நெடுஞ்செழியன், கலைஞர் மற்றும் MGR



அறிஞர் அண்ணாவுடன் சீடர்கள்....



NT ராமாராவ் வுடன் MGR









Tuesday, December 8, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

சென்ற ஏன்? எதற்கு? எப்படி? இடுகையில் வட்டம் மற்றும் வட்டம் சார்ந்த இயக்கங்களின் மனிதன் கண்டுபிடிப்பை பார்த்தோம். அதே போல் பூமியும் தன்னைத்தானே சுற்றும் இயக்க கோடும் ஒரு வட்டம்தான், ஏனெனில் பூமியும் கோளவடிவத்தில் இருக்கின்றது. பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் ஒரு நாள் என்று கணிக்கப்படுகின்றது. துள்ளியமாக சொன்னால் பூமி தன்னை ஒரு அச்சில் சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 23 மணி 56 நிமிடம் 4 வினாடி ஆகும். அப்படியென்றால் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகத்தை ( பூமியில் சுற்றளவு/23.56.4 மணி) கொண்டு கணக்கிடலாம்.


செயற்கைக்கோள்கள் என்பன பூமியை சுற்றுகின்றதா? அது எவ்வாறு சுற்றுகின்றது? செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றுகின்றன என்று சொல்வதை விட பூமியை இடம் வகிக்கின்றது என்பதுதான் சரியாக இருக்கும். பூமி தன்னைதானே இடம் சுழியாக சுற்றுகின்றது. அதாவது நாம் பூமியின் மேல் இருப்பதாகக் கொண்டால் நாம் மேற்கிலிருந்து கிழக்காக செல்கின்றோம். அதனால்தான் நிலையாக உள்ள சூரியன் நம் கண்ணுக்கு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றதாக தெரிகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 66,600 கி.மீ/மணிக்கு என்று கணகிடப்பட்டுள்ளது. அந்த வேகம் ஒவ்வொரு புள்ளிக்கும் மாறுபடும், காரணம் வட்டசார்பு இயக்கம் ஆரம் மாறுகின்றபொழுது வேகமும் மாறுபடும்.

செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்தில் சுற்றுகின்றது. சில 600 கி.மிட்டர் உயரத்திலும் சில 36,000 கி.மீட்டர் உயரத்திலும் அமைந்தப்படி சுற்றுகின்றது. இப்படி பல சுற்றுப்பாதைகளில் 800 செயற்கைகோள்களுக்கு மேலாக சுற்றுகின்றதாக தெரிகின்றது. பல செயற்கைக்கோள்கள் மனிதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருப்பதும் உண்டு. இவற்றை செயலிழந்த செயற்கைக்கோள் என்று குறிப்பிடுகின்றனர். செயலிழந்த செயற்கைக்கோள் என்றால் என்ன? என்பதை பின்னர் பார்க்கலாம்.

பெரும்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழற்ச்சியோடு சேர்ந்தே சுற்றுகின்றது. அவைகள் பூமியின் வேகத்தையும் செயற்கை கோளின் உயரத்தையும் துள்ளியமாக கணக்கிட்டு பூமியின் இடம் வகிக்கின்றது. அதாவது இந்தியா அனுப்பிய "கல்பனா" செயற்கைக்கோள் இந்தியாவை நோக்கி பார்த்தபடியே இருக்கின்றது. "கல்பனா" செயற்கைக்கோள் பூமியிலிருந்து 36,000 கி.மீட்டர் உயரத்திலிருந்து தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு, வானிலை போன்றவற்றிக்கு பயன்பட்டு வருகின்றது.

இவ்வகை செயற்கைக்கொள்கள் ஒருமுறை பூமியை வலம் வர பூமியை போலவே
23 மணி 56 நிமிடம் 4 வினாடி எடுத்துக்கொள்வதால் அவைகள் நிலையாக இருப்பதுபோல இருக்கும். 36,000 கி.மீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைகோள் பூமியை 23 மணி 56 நிமிடம் 4 வினாடி சுற்றிவர மணிக்கு 11,000 கி.மீட்டர் வேகத்தை எடுத்துக்கொள்கின்றது.

பெருன்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றினாலும் சில வகை செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காகவும் சுற்றுகின்றது. இந்தியா அனுப்பிய ஐ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் இவ்வாறே சுற்றுகின்றது. ரஷ்யா,நார்வே,கனடா போன்ற நாடுகள் அனுப்புகின்ற செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காக சுற்றும் பாதையைதான் தேர்வு செய்யப்படுகின்றது. அதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பாகும்.

இப்படி செயற்கைக்கோள்கள் பூமியை சரியான வேகத்தில் சுற்றிவர எரிப்பொருள் தேவையா? ஆம் என்றாலும் செயற்கைக்கோள்கள் சுற்றுவதற்கு எரிபொருள் பயன்படுத்தவில்லை. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த ராக்கெட்களுக்கு எரிபோருள் தேவை. ராக்கெட்கள் நியூட்டனின் விதிப்படி "எந்த ஒரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" என்ற தத்துவத்தில் இயங்குகின்றது. செயற்கைக்கோள்களை ராக்கெட்டுடன் அமைக்கப்பட்ட நுட்பமான அமைப்புகள் அதன் சுற்றுப்பாதையில் உந்திவிடப்படுகின்றது. அப்படி உந்தப்பட்ட செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுற்றுகின்றது. செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை வெற்றிடமாக தேர்வுசெய்துள்ளதால் அது தொடர்ந்து சுற்றிவருகின்றது. அதாவது நியூட்டனின் மற்றொரு விதிப்படி "எந்த ஒரு புறவிசை தாக்காவிடின் அசையா பொருள் அசையாமலும் அசையும் பொருள் அசைந்துகொண்டே இருக்கும்". அப்படி பார்த்தால் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருப்பதால் புறவிசைகள் இல்லை எனவே உந்தம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே எரிப்பொருள் தேவைப்படவில்லை.

அப்படி உந்தப்பட்ட செயற்கைகோள்களின் வேகம் சீராகவே இருக்கவேண்டும். ஆனால் பலக்காரணங்களால் அதன் வேகம் சிறிது மாறுபடலாம் அவற்றை எப்படி சரிசெய்யப்படுகின்றது? செயற்கைக்கோள்களில் எல்லா புறங்களிலும் எரிப்பொருளுடன் கூடிய சிறியவகை ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் இவற்றை பீச்சிட செய்து செயற்கைக்கோளை முன்னும் பின்னும் நகர்த்தி சரிசெய்யப்படுகின்றது. இவற்றை எதிர் ராக்கெட்டுகள் என்று கூறுவதுண்டு. இப்படி எதிர் ராக்கெட்டுகள் கணனி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. எதிர் ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிப்பொருள் இருக்கும் வரைதான் நம்மால் கட்டுப்படுத்த முடியும். அப்படி எரிப்பொருள் தீரும் பச்சத்தில் அந்த செயற்கைக்கோள்
செயலிழந்தாக கருதப்படுகின்றது. ஒரு செயற்கைக்கோள் ஆயுள் என்பது அதன் எரிப்பொருள் தேவையை பொருத்தே இருக்கின்றது. எரிப்பொருள் முடிந்ததும் அந்த செயற்கைக்கோளின் ஆயுளும் முடிந்துவிடுகின்றது.

மேலும் ஒரு துண்டு செய்தி: செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருக்க வேண்டும் எனவேதான் அவற்றினை பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்திற்கு மேல் உந்திவிடப்படுகின்றது. ரஷ்யா, நார்வே, கனடா போன்ற நாடுகளின் புவியில் அமைப்பு பூமியின் சுற்றுமையத்திற்கு அருகில் இருப்பதால்தான் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை வடக்கிலிருந்து தேற்காக தேர்வு செய்யப்படுகின்றது. மேலும் இவ்வகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவர 12 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றது. எனவே இரண்டு மூன்று செயற்கைக்கோள்கள் மூலம் பணியை சரியாக செய்ய பயன்படுத்துகின்றனர். ஒரு செயற்கைக்கோள் அந்த நாட்டை 8 மணி நேரம் அதன் பகுதியில் இருந்து அதன் பணியை செய்யும்.

முக்கிய குறிப்பு: நான் படித்த, அறிந்தவைகளை தொகுத்துள்ளேன் தவறுகள் இருக்கலாம். சாதரணமான என்னால் புரிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன். தவறுகள் இருந்தால் தாரளமாக சுட்டிக்காட்டுங்கள் திருத்திவிடலாம். ( கட்டுரை நீண்டுவிட்டது, முக்கியமான செய்திகளாக நான் கருதியதால்)

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

சமீபத்தைய இடுகைகள்