_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, May 31, 2009

நமக்கு தெரிந்த முல்லா கதை ஒன்னு...

நான் படித்த முல்லா கதை ஒன்னு.. முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையை திருப்பி தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையை திருப்பி கேட்டார். அதற்கு முல்லா "அடடே..., உங்களிடம் வாங்கிய பானையை திருப்பி கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்த பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, "என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிசென்றார்.

அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் "முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார். " அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு" என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் "என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் " என்று கோபமுற்றார். அதற்கு முல்லா " பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? " என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்......

ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோ.... அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?... ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோமே ஏன்? அதை பற்றி அடுத்த பதிவுல பாக்கலாங்க.....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, May 29, 2009

ஒடுக்கி நசுக்கப்படுவதேன்?..

உலகமயமாக்களில் ஏற்பட்ட வாணிப சூழலில் உலகம் இதுவரை எட்டாத பொருளியல் மந்தநிலையை சந்தித்துக்கொண்டுள்ளதை எல்லோரும் அறிந்ததே. இதில் அமெரிக்கா 90% ஆட்டம் கண்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகம் பெரும்பகுதி உள்நாட்டு வாணிபத்தை நம்பியுள்ளதால் இந்த பொருளியல் மந்தத்தின் தாக்கம் இல்லை என்று சொல்லும் அளவிற்கே உள்ளது.

இந்த பொருளியல் மந்தசூழலில் தனியார் மற்றும் கார்ப்ரேட் நிர்வணங்கள் பாதிக்கும் என்று அந்தந்த நாட்டு அரசு பாதிக்கப்படும் நிர்வாகத்திற்கு சலுகைகளும் உதவிகளும் செய்து மீட்டெடுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. மேலும் நிர்வாகம் சம்பளக்குறைப்பு, சலுகைகளை எடுத்தல், வேலைப்பழுவை அதிகப்படுத்துதல் மற்றும் ஆட்குறைப்பு செய்கின்றது . இப்படி செய்து சாமானியனின் தலையில் சுமையை வைக்கின்றது. கடன் அட்டையின் கவர்ச்சி திட்டதினால் பாதிப்புக்கு ஆளான சாமானியனுக்கு இந்த சுமை தற்கொலையை தேடும் அளவிலே உள்ளது.மேலும் சில இடங்களில் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடந்துள்ளதை பார்க்கும்பொழுது நிர்வாகம் அரசு சலுகையை தவறாக பயன்படுத்துகின்றதா? என்ற எண்ணம் தோன்றுவதில் ஞாயம் இருக்கதான் செய்கின்றது.

ஆக குறைந்த பொருளியல் மந்தநிலையை தொட்டுவிட்டோமா? இல்லை இன்னும் கடக்கவேண்டியுள்ளதா? என்று தெரியாத சூழல்தான் இன் று இருக்கின்றது. பல தனியார் மற்றும் கார்ப்ரேட் நிர்வாகம் பொருளியல் மந்தநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சம்பளக்குறைப்பு மற்றும் ஒருவரின் வேலைப்பழுவை அதிகப்படுத்துதல் போன்றவைகளை செயல்படுத்துகின்றது. மேலும் சில இடங்களில் ஆட்குறைப்பும் நடைபெறுகின்றது. இதனால் கிடைக்கும் நிதியில் நிர்வாகம் பாராமரிப்பு பணிகளை செய்கின்றது. இதேபோல் சாமானியன் மேலும் மேலும் நசுக்கப்பட வேண்டிய சூழலே இருக்கின்றது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை. அதே போல்தான் நிர்வாகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது சாமானியனுக்கு எதுவும் கொடுத்துவிடவில்லை. ஆனால் பொருளியியல் மந்தநிலையில் மட்டும் சம்பளக்குறைப்பை முன்வைக்கின்றது. இந்த மந்தநிலை சரியாகும்பொழுது நிர்வாகம் சாமானியனை கண்டுக்கொள்ளாது. தற்பொழுது வர்த்தகம் ஏற்ற நிலையில் உள்ளதாக தெரிகின்றது, ஆனாலும் தொழிலாளிகளிடம் கொடுத்த சுமைகள் அப்படியே வைத்துவிட்டு லாபத்தை மட்டுமே நிர்வாகம் குறிவைக்கின்றது.

இன்றைய சூழலில் சாமானியனுக்கு ஒரு வேண்டுகோள் கடன் அட்டையை முறையாக பயன்படுத்துங்கள். கவர்ச்சி திட்டங்களை பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..........
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Thursday, May 28, 2009

தீக்குச்சி...

தீக்குச்சி...

ந்தல் சிறார்களின்,
ண்ணீரில் கலந்த
ந்தக குப்பிகள்......





ஆ.ஞானசேகரன்..

Monday, May 25, 2009

பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 3

பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 3

முதல் இரண்டு பகுதிகளை படிக்க சுட்டியை சுட்டி படிக்கலாம்.
பெண்ணொன்று கண்டேன்...
பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 2

மேற்கண்ட இரண்டு பகுதிகளையும் படித்த நண்பர் ஆதவா என்னிடம் அலைபேசியில் கேட்ட கேள்வி, " பெண்பார்க்கும் பொழுது பெண்ணிடம் முதலில் என்ன பேச வேண்டும்?, இரண்டாவதாக எனக்கு பிடித்த பெண்ணிற்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது ?அதேபோல் பெண்ணிற்கும்."....
நான் சிங்கபூரில் வேலைசெய்கின்றேன் என்வயது அப்பொழுது திருமணத்தை தொட்டது எனவே என் பெற்றோர்களிடம் பெண்பார்க்க சொன்னேன். என் அப்பா உனக்கு எப்படிப்பட்ட பெண் பார்க்கவேண்டும்? என்று கேட்டார். நான் என் அப்பாவிடம் உங்களுக்கும் அம்மாவிற்கும் பிடித்ததாக பாருங்கள் போகும்பொழுது என் நண்பனையும் அழைத்து செல்லுங்கள் என்றேன். (என் கணக்கின்படி என் பெற்றோர் குடும்பம் பழக்கவழக்கங்களை பார்ப்பார்கள், என் நண்பர் எனக்கு பெண் "பார்வைக்கு" எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்பதை கவணிப்பார் என்று கணித்தேன் என் நண்பர் மணமானவர்) மேலும் பல புகைப்படங்களை அனுப்பவேண்டாம் உங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பெண் புகைப்படம் மட்டுமே போதும் என்றேன். அதன்படி ஒரு புகைப்படம் மட்டுமே வந்தது, அதனுடன் பெண்ணைப்பற்றிய விவரம் மற்றும் வேலைசெய்யும் இடத்தின் தொலைபேசி எண்ணும் இருந்தது. புகைப்படம் பார்த்தவுடனே பிடிக்கும் அளவில் இல்லை என்றாலும் என் மனம் சரி என்றே சொல்லியது. இருப்பினும் என் பணி மற்றும் என் நிலைகளை பெண்ணிற்கு தெரியப்படுத்தினால் நல்லதாகப்பட்டது. நான் யாரிடமும் கேட்காமலே அந்த தொலைப்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டேன். மறுமுனையில் பேசியது பெண்ணேதான், நான் என் பெயரை சொல்லியதும் அவளிடம் ஒரு நடுக்கம். பின் அவளாகவே பேசினாள் " நான் உங்கள் குடுப்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தேன், உங்கள் போட்டோவையும் பார்த்தேன் எனக்கு உங்களை பிடித்திருக்கின்றது, என் போட்டொ மற்றும் விவரங்கள் பார்த்தீர்களா? என்னை பிடித்திருக்கின்றதா? " என்றாள். எதிர்முனையில் நான் பேசாதவனானேன், என் அப்பாவிடம் சொல்லுகின்றேன் என்று சொல்லி முடித்துக்கொண்டேன். (என் மனம் இவள்! இவளேதான் என்றது) இன்றுவரை நான் அவளிடம் உன்னை எனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லியதில்லை, அப்படியே நடந்துக்கொள்கின்றேன். 8வயது பையனுக்கும் 4 வயது பெண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். திருமணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்தான் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் .

மேற்கண்ட என் வாழ்வியல் சம்பவம் உற்று நோக்கினால் நண்பர் ஆதவாவிற்கு நல்ல பதிலை கொடுக்கலாம் என்றே தோன்றுகின்றது. பெண்பார்க்கும் பொழுது அந்த ஒரு நிமிடத்தில் ஆண் பெண்ணிடம் பேசுவதினாலோ அல்லது பெண் ஆணுடன் பேசுவதினாலோ புரிந்துக்கொள்ளுதல் என்பது சாத்தியமில்லை. மாறாக முதல் இரவில் வரும் அனுபவம் சுவாராசியம் இல்லாமல் போகலாம் என்றே தோண்றுகின்றது. ஒரு ஆண் அல்லது பெண் தன்னுடைய திருமணத்திற்கு மனதியியல் முறையில் தன்னை தாயார்ப்படுத்துதல் என்பதுதான் முக்கியம். இளமையும் அழகும் வாழ்க்கையில் கூடவே வருவதில்லை அன்பும் அரவணைப்பும்தான் நம்முடன் வரக்கூடியது. எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சுமம் உள்ளது. அதை புரிந்துக்கொண்டாள் இந்த உலகம் நம்கையில் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சூட்சுமதிற்கு நம்மை தயார்படுத்துதலில்தான் பெண்பார்த்தல் சடங்கில் உள்ள வெற்றிகள்.

எனக்கு பிடித்த பெண்ணிற்கு என்னை பிடிக்காமல் போனால்???? என்ன பன்றதுங்க எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடுவதில்லை. என்னை பிடித்தவளுக்கு பிடித்தவனாக இருக்க தயார்ப்படுத்தலாமே.... இந்த தயார்ப்படுத்துதல்தான் திருமணத்தின் வெற்றிகள். பிடித்தவர்களை மணம்செய்தவர்கள் எத்தனைபேர் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்? நான் கேட்ட பல காதல் திருமண தம்பதிகள் " காதலின் முடிவில் திருமணம் என்ற நிலையில் இவர்கள் மனதில் இது தேவையில்லை என்றே மனம் சொல்வதாக சொன்னார்கள். மேலும் எதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்றாலும் பரவாயில்லை என்ற மனநிலை இருந்ததாக கூறினர்". திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது என்பதை புரிந்துகொண்டால் உங்கள் இரண்டாவது கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்...

இன்னும் வரும்
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

Saturday, May 23, 2009

வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேடிக்கை...

வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேடிக்கை...

சென்றமுறை திருச்சிக்கு சென்றபொழுது என் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டில் அப்பொழுதுதான் BSNL Broadband எடுத்திருந்தார். நண்பரின் பையன் மடிக்கணனிக்கு BSNL அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட wireless network ADSL router மூலம் தொடர்புக்கு முயற்சி செய்துபார்த்து முடியாமல் என்னிடம் கேட்டார். அதற்கான setting எனக்கும் தெரியவில்லை பின் திருச்சியில் இருக்கும் BSNL அலுவலகதிற்கு என் நண்பருடன் சென்றேன். அங்கு பார்த்த வாசகம் என்னை கவர்ந்தது. உடனே என் அலைபேசி புகைப்பட சாதனத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் தெளிவாக வரவில்லை இருப்பினும் அதன் வரிசையை கீழேக் கொடுத்துள்ளேன்.

நமது வாடிக்கையாளர்

நமது நிலையத்திற்கு வருகை தருபவர்கள்
வாடிக்கையாளரே மிகவும் முக்கியமானவர்
அவர் நம்மை சார்திருக்கவில்லை
நாம் அவரை சார்ந்துள்ளோம்.
அவர் நமது வேலைக்கு இடையூராக இல்லை
அவர் நமது வேலையின் உயிர் நாடி
அவர் நமது தொழிலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
அவர் நம்து தொழிலின் ஒரு பகுதி
நாம் அவருக்கு பணிபுரிவதன் மூலம் அவருக்கு
எந்த ஒரு பயனும் செய்வதில்லை
மாறாக நாம் அவருக்கு சேவை செய்ய
அவர் நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளார்.
-மகாத்மா காந்தியடிகள்

மேற்கண்ட வாசகம் என்னை கவர்ந்தது மட்டுமில்லை மகிழச்செய்தது. பின் அங்கு இருக்கும் அலுவலரை அனுகி எங்கள் சந்தேகங்களை கேட்டோம். அதற்கு அவர் இதை Techinical support க்கு தொடர்புக் கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்ணும் கொடுத்தார். பின்னர் அந்த எண்ணுக்கு தொடர்புக் கொண்டோம், அவர்கள் எதுவும் சொல்லாமல் உங்கள் அருகில் உள்ள Engeneer ஐ தொடர்புக்கொண்டு சரிசெய்துக்கொள்ளவும் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு BSNL அலுவலகத்தில் பார்த்து படித்த வாசகம் கண்முன் ஓடியது (நமது வாடிக்கையாளர்கள்..........................)

அதன் பின் ஒரு நண்பர் மூலம் சரிசெய்தாகிவிட்டது. தற்பொழுது இணையத்தில் பார்த்தபொழுது அதற்கான செயல்முறை விளக்கம் கிடைத்தது அதைப்பார்க்க சுட்டியை சுட்டவும்

என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது.

அன்புடன்,

ஆ.ஞானசேகரன்

Thursday, May 21, 2009

சாமானியனின் எண்ணக்குவியல் - வேலுப்பிள்ளை பிரபாகரன்

சாமானியனின் எண்ணக்குவியல் - வேலுப்பிள்ளை பிரபாகரன்

50 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சனையில் 25 ஆண்டுகள் தமிழர்களின் பாதுகாவலனாக இருந்து வழிநடத்திய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று இலங்கை அரசு ஊடகங்களில் அவர் இறந்துவிட்டதாகவும் விடுதலைப் புலிகளிடையேயான போர் அமைதிக்கு வந்துவிட்டதாகவும் இலங்கையில் விழாக்கோலம் ஆக்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் சார்பில் இவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இது ஒரு பித்தலாட்டம் என்று சில ஊடகம் கூறுகின்றது. இதேபோல் முன்பு 1989 ம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக இந்திய அரசு அறிவித்த நிலையில் 1990 ல் தொன்றி பேசியது நினைவில் கொள்ளவேண்டிய விடயம்.

பிரபாகரனின் மரணம் எப்படி? விடை தெரியா கேள்விகள்-தினமலர்

புலிகளின் தலைவர்கள் வஞ்சகமாக கொல்லப்பட்டனர்: பத்மநாதன்-வெப்துனியா

தலைவர் பிரபாகரனின் இறந்த உடல்: பல சந்தேகங்கள் - தமிழ்வின்

மேலும் ஒரு காணோளி



இப்படிப்பட்ட சந்தேகங்களுகிடையே ஒரு சாமானியனின் எண்ணங்களாக,....
வருத்தம்: உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக வைத்துக்கொண்டால் அதற்காக வருத்தப்படாத தமிழன் இருக்கவே முடியாது. அதேபோல் இலங்கையில் நடக்கும் விழாக்கோலம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அப்படியே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக வைத்துக்கொண்டால் தற்பொழுது இலங்கையில் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் தமிழர்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பாமல் விழாக்கோலம் சூடுவதில் அர்த்தமில்லை மேலும் கண்டிக்கக்கூடியது.

எதிர்பார்ப்பது: மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் ரகசிய உதவிகளின் பயனாகதான் பிரபாகரன் என்ற நிலை உருவாக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளும்பொழுது... ஒரு போராளிகளை, 40 நாடுகளில் திவீரவாத இயக்கம் என்ற ஒதுக்கப்பட்டவர்களை கழைவதற்கு இந்திய அரசு ரகசிமாக உதவியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது இந்த சாமானியனின் மனோநிலை. அதுவே சரி என்று ஏற்றுக்கொண்டாலும் அப்பாவி மக்களின் ரணகளம் எக்காரணத்தாலும் ஏற்றுகொள்ளவே முடியாது.

பல நொண்டி சாக்குகளை சொல்லி அப்பாவிகளை காப்பாற்றாமல் இருக்கும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வியும் விண்ணப்பமும். புலிகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்று சொல்லிய இந்திய அரசே, இன்று இலங்கை அரசின் ஒப்புதலின் பேரில் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். மீதம் உள்ள தமிழர்களின் மேல் ஒரு தூசி விழுந்தாலும் நீங்கள் தடுக்க தயாராக உள்ளீர்களா? அவலைகளாக, சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கும் நம் உறவுகளின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தர தயாரா? இதுவரை சொன்ன நொண்டி சாக்கை சொல்லாமல் உதவிகரம் நீட்டுங்கள். அப்படிப்பட்ட அரசைதான் என்னைப்போன்ற சாமானியன் எதிர்பார்கின்றான்.

வரலாற்றில் பிழை: விடுதலை புலிகளின் வரலாற்று பிழைகளாக கூறுவது, ஒன்று மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது அதை தொடர்ந்த சம்பவங்களில் ராஜிகாந்தி கொல்லப்பட்டது. இரண்டாவது தொடர்ச்சியாக தலைவர்களை புலிகளின் தற்கொலை படையால் கொல்ல‌ப்பட்டது. இந்த இரண்டு பிழைகள் நடக்காமல் இருந்திருந்தால் நாம் பேசவேண்டிய விடயம் மாற்றாக இருக்கும்.

செய்யத்தவறியது: 25 ஆண்டுகளாக புலிகள் ஒரு போராளியாகவும், அதனை தொடர்ந்து ஒரு திவீரவாத இயக்கம் என்ற பெயராலும் இயங்கி வந்ததே தவிர அரசியல் சார்ந்த இயக்கமாக மாற்றாமல் இருந்தது ஒரு பெரிய குறை. மேலும் இதுவே அவர்களின் பேரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. போராளிகள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்றாலும் போராளிகளால் தீர்வுகாண்பதில்லை. தக்க தருணத்தில் அதை அரசியல் சார்ந்த இயக்கமாக மாற்றாமல் விட்டது ஒரு பெரிய குறை, குற்றம் என்றே சொல்லலாம்.

செய்யவேண்டியது: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூற்றுப்படி போர் முடிவுக்கு வந்துவிட்டது எனக்கொண்டால், இனி இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப் படவேண்டும். அவர்களுக்கு நாட்டின் உரிமைகள் சமபங்கீடு கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கி சகசநிலைக்கு கொண்டுசெல்ல எல்லா உதவிகளையும் செய்யவேண்டும். இப்படி இலங்கை அரசு செய்யத் தவறும்பச்சதில் இந்தியா போர்கொடி தூக்க தயங்ககூடாது.

போராளிகள் உருவாகுவதில்லை, மாறாக உருவாக்க படுகின்றார்கள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, May 18, 2009

அன்பு மக்களே! நம்பமுடியாத பதிவர் சந்திப்பு திருச்சியில்(13-05-2009)

அன்பு மக்களே! நம்பமுடியாத பதிவர் சந்திப்பு திருச்சியில்(13-05-2009)

அன்பு வலைப்பெரு நண்பர்களே! வணக்கம் வணக்கம்...
இரண்டு வார விடுமுறைக்குப்பின் உங்களை சந்திப்பதில் ஆணந்தம், அதற்குள் ஆதாரமற்ற தகவல்கள் நம்மை மனம் வெம்பச் செய்கின்றது. எப்படியானாலும் நம்முடைய உறவுகள் ரணப்படுவதை நம்மால் சீரணிக்க முடியாது......

இந்த இரண்டுவார விடுமுறையில் திருச்சியில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பில் கலந்துக்கொண்டு நண்பர்களை பார்த்து பழகியதில் இன்றுவரை என்னை மகிழச்செய்கின்றது. இந்த சந்திப்பை பற்றிய பதிவுகள் நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்துவிட்டார்கள்......
நண்பர் பொன் வாசுதேவன் அகநாழிகை வாழிப வயோதிக அன்பர்களே
நண்பர் கார்திகைப் பாண்டியன் பொன்னியின் செல்வன் பட்டையக் கிளப்பிய பதிவர் சந்திப்பு - நன்றி..!!!
நண்பர் டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி திருச்சி பதிவர் சந்திப்பு-படங்கள்!!

இருப்பினும் என் எண்ணங்களையும் பதிந்துவிடலாம் என்ற ஆசைகள்.. நண்பர் கார்த்திகைப் பாண்டியனும் நண்பர் சொல்லரசனும் என்னை இந்த பதிவர் சந்திப்புக்கு அலைபேசியில் அழைத்தார்கள். நண்பர் பொன். வாசுதேவன் மற்றும் ஆதவாவும் வருதாக கூறினார்கள். நானும் வருகின்றேன் என்றேன், எனக்காக திருச்சியில் 13-05-2009 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்து மேலும் ஒரு மகிழ்ச்சியை கொடுத்த நண்பர்களே நன்றிபா!!! கடைசி நேரத்தில் ஆதவா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை என்று அலைபேசியில் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவரின் ஆர்வம் பாராட்டக்கூடியது. மேலும் நண்பர்கள் சக்கரை சுரேஷ், குமாரை நிலாவன் , நையாண்டி நைனா , ஆ.முத்துராமலிங்கம் தாங்கள் வர இயலாத சூழ்நிலையில் அலைபேசியில் தொடர்புக்கொண்டு வாழ்த்துகளை அள்ளி வழங்கினார்கள். அவர்களின் இந்த ஆர்வம் எல்லொரையும் மகிழ்வூட்டியது.

நண்பர் வாசுவும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனும் முதல்நாள் இரவே திருச்சி வந்து தங்கிவிடார்கள். அதன் பின் சொல்லரசன் , தமிழ் மதுரம் - கமல், தமிழ்த்துளி - டாக்டர் தேவன்மாயம், இளைய கவி - கணேஷ் குமார் இவருடன் அவர் நண்பரும் வந்திருந்தார். இவர்களின் இன்பவெள்ளத்தில் நானும் கலந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சிதான் போங்க!!!!!!! காலை 10 மணியளவில் தொடங்கிய சந்திப்பு மதிய உணவிற்குப் பின் மாலை 5 மணி வரை நீண்டதில் சலிப்பே வரவில்லை. மெல்போன் கமல் புதிதாக மணம்முடித்த மனைவியுடன் வந்ததால் உடன் சென்றுவிட்டார். மதிய உணவிற்கு பின்னர் நண்பர் கணேஷ் விடைப்பெற்றார். கடைசியாக மாலை 5 மணிக்கு எல்லோரும் பிரியா விடையில் அவரவர் வீடு சென்றோம். சந்திப்பில் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டனர்,பின் பல விடயம் பேசப்பட்டது.

*************************************************************************************
மேலேயுள்ள புகைப்படம் நண்பர் பொன்.வாசுதேவன் அகநாழிகை இவரின் பேச்சு எளிமையாக இருந்தது, அதே போல் பார்வைக்கும் பழகுவதற்கும் நல்ல நண்பராக இருந்தார். சந்திப்பில் ஒரு கவிதையும் வாசித்தார். அவரைப்பற்றி அவரே கூறுகின்றார்.... பாருங்கள் காணொளியை.....




அதேபோல் நான் கேட்ட கேள்விக்காக (ஏன் கவிதைகளில் கடினமான சொற்கள் பாவிக்கின்றார்கள்?) ஒரு கவிதையும் சொல்லி விளக்கினார்; பழக்கத்தில் இல்லாததால்தான் அந்த சொற்கள் கடினமாக தெரிகின்றது என்றும் புரிந்துக்கொண்டால் எழிதுதான் என்றார்.





************************************************************************************


மேலேயுள்ள புகைப்படம் டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி , இவர் ஒரு மருத்துவர் காரைக்குடியை சேர்ந்தவர். நல்ல கலகலப்பாக பேசுகின்றார் அதேபோல் மற்றவர்களை பாராட்டுவதில் தயங்குவதில்லை.. அவரைப்பற்றி அவரே சொல்லுகின்றார் பாருங்கள் காணொளியை.......








***************************************************************************************

மேலேயுள்ள புகைப்படம் நண்பர் ஜேம்ஸ் சகாயராஜ் சொல்லரசன் திருச்சியில் வசித்தாலும் வேலை திருப்பூரில். அமைதியும் நிதானமும் உள்ள நண்பாராக காணப்பட்டார். பல முறை என்னுடன் அலைப்பேசியில் பேசியுள்ளார். அவரைப்பற்றி அவரே சொல்கின்றார் காணொளியில்





**************************************************************************************

மேலேயுள்ள புகைப்படம் நண்பர் மெல்ர்போன் கமல் தமிழ் மதுரம் இவர் ஒரு ஈழத்தமிழர் திருச்சியில் படிக்கும் தன்னுடைய முறைப்பெண்ணை மணம் முடித்துவிட்டு சந்திப்பில் தன் மனைவியுடன் வந்திருந்தார். இளையவர் வானொலி அறிப்பாளாராக பகுதிநேரம் பணியுடன் படிக்கின்றார். இவரைப்பற்றி இவரே; காணொளியை பார்க்கவும்....





*************************************************************************************

மேலேயுள்ள புகைப்படம் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் பொன்னியின் செல்வன் திருமணத்திற்காக காத்திருக்கும் கல்லூரி ஆசிரியர். நல்ல கலகலப்பான பட்டையை கிளப்பும் நண்பர். சந்திப்பில் காமடியுடன் பேசியவர், மிமிக்கிரி செய்ய கூடியவர் என்றே நினைக்கின்றேன். இவருடனும் அலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். அஜித்தின் விசிரி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகின்றார். பழக நல்ல நண்பர்.... அவரைப்பற்றி அவரே சொல்கின்றார் காணொளியில்...




*************************************************************************************

மேலேயுள்ள படம் நண்பர் கணேஷ் குமார் இளைய கவி . இவர் தமிழ்துளியில் முக்கிய பொருப்பில் இருக்கின்றார். துருத்துருவென பேசி எல்லோரையும் மகிழச்செய்யும் நல்ல நண்பர். இவருடன் இவர் நண்பரும் வந்திருந்தார் அவர் புகைப்படம் கீழேயுள்ளது. தொழில் நுட்பக்கோளாறுக் காரணமாக அவரின் காணொளி எடுக்க முடியவில்லை.



***********************************************************************************

என்னைப்பற்றி நான் சொல்லும்பொழுது காணொளி கருவி என் கையில் இருந்ததால் காணொளி பிடிக்கமுடியவில்லை. கமல் பதிவில் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். முடிந்தவரை பகிந்துக்கொண்டேன் என்று நம்புகின்றென்.

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்