_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 30, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 4

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 4

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மேலே உள்ள சுட்டிகளில் பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், தேவைக்கு அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. பின்னர் நமக்கு என்ன?/ எவனோ?/ எப்படியோ? செய்கின்றான் என்ற சுயநலமும் ஒரு காரணமாக அமைகின்றது.

இன்றைய மனிதனை என்னதான் அறிவியல் வளர்த்தாலும் தேவையில்லா மூடப்பழக்கங்கள் மனதை பாதிக்கத்தான் செய்கின்றது. அதற்கு முன்பே கூறியது போல மரபியியல் பண்பும் ஒரு காரணமாககூட இருக்கலாம். இப்படிப்பட்ட மனபோக்கை மாற்ற முறையான பயிற்சி தேவை என்பதை மட்டும் மறக்க முடியாது.

வீட்டை விட்டு வெளியில் போகும்பொழுது எங்கே போகின்றாய்? என்று கேட்டால் போகின்ற செயல் நல்லபடியாக நடக்காது என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கு. இப்படி ஒரு பழக்கம் தெரியாதவரை உன்னையும் என்னையும் பாதிக்க போவதில்லை ஆனால் இந்த ஒரு நம்பிக்கை தெரிந்துவிட்டால் (மனதில் பதிந்துவிட்டால்) அதனை எதிர்க்க மனதில் திடம் இல்லாமல் போகின்றதே ஏன்? போகின்ற செயல் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற ஆசை. அப்படி ஏதேனும் தவறு நடக்குமோ என்ற பயம். எல்லோரும் நம்புகின்றார்களே நாமும் நம்புவதால் என்ன ஆகபோகின்றது என்ற மெத்தன போக்கு. இப்படியே சின்ன சின்ன மூடப்பழக்கங்களை இந்த சமுகத்திற்கு நம் முன்னோர்கள் விட்டு சென்றது ஏராலம்.

எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதுமே ஜாதகம், ஜோசியம் என்ற மனப்போக்கில் இருப்பார். நான் அவரை "ஏன்யா இந்த காலத்திலும் இப்படி இருக்க? என்று கேட்பேன்". அதற்கு அவர் "அவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ என் மனதிற்கு ஆறுதல் தருகின்றது அதனால் நம்புகின்றேன்" என்று வியாக்கானம் சொல்லுவார். இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்தமுடியும். நடிகர் ரஜினி சார் ஒரு படத்தில் "சாவுகின்ற காலம் தெரிந்தால் வாழுகின்ற காலம் நரகம்" என்று சொல்லுவார். அதேபோல ஜொசியம், ஜாதகம் உண்மையாகவே இருந்தாலும் அதை முன்னரே தெரிந்துக்கொண்டு வாழுகின்ற காலத்தை நரகமாக்கிக்கொள்ளும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது. இப்படிப்பட்ட மனிதர்கள் தன்னுடைய கையாலாகாத தனத்தை தன் பிள்ளைகள் மூலம் மூடப்பழக்கம் என்ற விதைகளை உலகில் தெளித்துவிட்டு செல்கின்றார்கள். விதைகள் முளைத்து இன்று ஆலமரங்களாக இருக்கின்றது.

எனக்கு தெரிந்து "ஏன்?" என்று கேட்ககூடிய ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. அப்படி "ஏன்?" என்ற கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் இருந்துவிட்டால் அந்த" ஏன்?" க்கு பின்னால் இருக்கும் குறிபோல வாழ்க்கையும் வலைந்து போய்விடும். பல மூடப்பழக்கங்கள் இந்த "ஏன்?" என்ற கேள்வியை கேட்காமலே இருந்ததால்தான் இன்று மனிதன் அந்த பழக்கங்களுக்கு பின்னால் செல்லவேண்டியுள்ளது. இன்றாவது அந்த கேள்வியை கேட்டுப்பாருங்கள் எப்படியும் ஒரு மூடப்பழக்கமாவது அற்றுப்போய்விடும்.

(புகைப்படம் நன்றி தமிழ் ஓவியா)

மூடப்பழக்கம் என்பது மக்களின் கலாச்சரத்துடன் ஒன்றி ஒழிந்துக்கொண்டுள்ளது. அப்படி ஒழிந்துக்கொண்டுள்ளதால் அப்படிப்பட்ட பழக்கங்களை விடுவதும் சாதாரண விடயமும் இல்லை. தாலிக்கட்டுதல் என்பது நமது சமுகத்தில் இருக்கும் பழக்கம் இதை மாற்றங்கள் செய்யமுடிமே ஒழிய மறுக்க முடியாது. பெரியார் இயக்கத்தினர் தாலிக்கட்டுதலை எதிர்கின்றார்கள் அப்படிப்பட்ட இயக்கத்தினரால்தான் பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்கள். அங்கேயும் "ஏன்" என்ற கேள்விக்கு பதில் குழப்பமாகதான் இருக்கும். நமது கலாச்சாரமும் அறிவிற்கு அப்பாற்பட்ட பழக்கங்களை கொண்டுள்ளது. அவற்றையெல்லாம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் மனம் ஏற்றுகொள்கின்றது.

மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும். அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம் (உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!)
ஆ.ஞானசேகரன்.

Monday, November 23, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 8

ஏன்? எதற்கு? எப்படி?..... 8

வலைமக்களே! மீண்டும் ஒரு ஏன்? எதற்கு? எப்படி?.... என்ற தலைப்பின் கீழ் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதர்களுக்குள் எழும் கேள்விகளை அனைவரோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. நமக்குள் இருக்கும் கேள்விகள்தானே ஆறாவது அறிவின் அடிநாதம். ஒவ்வொரு அறிவியல் கண்டுப்பிடிப்புக்களுக்கு பின்னால் இருப்பது இந்த கேள்விகள்தான். அப்படிப்பட்ட கேள்விகளின் பதிலாகத்தான் ஒவ்வொரு கண்டுப்பிடிப்புகளும் கிடைத்ததுள்ளது.(இன்றைய தமிழகத்தில் கேள்விகளை மனிதன் மனதிலிருந்து அப்பறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைத்தான் தொலைக்காட்சியும் அதன் தொடர் இம்சை நாடகங்களும். எந்த ஒரு கேள்வியையும் கேட்க திரணியிள்ளா உணர்வை வளர்ப்பதற்கு தொலைக்காட்சியின் சேவை பெரிதும் துணையாக நிற்கின்றது. நம்பிக்கையில்லை என்றால் தொடர்ந்து 24 மணிநேரமும் இரண்டு நாள் சூரிய தொலைக்காட்சியை பார்த்துவிட்டு உங்களின் மனதை கவணித்துப்பாருங்கள் புரிந்துவிடும் நாம் திரணியற்றவர்கள் என்பது இதைதான் அரசும் அசூர வேகத்தில் செய்துவருகின்றது).

மனிதனின் தேவையும் சாதகமான சூழ்நிலையும் கிடைக்கப்பெற்றால் அறிவியல் கண்டுப்பிடிப்புகள் வந்தடையும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிதான் எல்லா கண்டுப்பிடிப்புகளும் வந்துள்ளது என்றாலும் ஒரு சில கண்டுப்பிடிப்புகள் தற்காலிகமாக நடந்த நிகழ்வுகளாய் இருக்கும். அதுவும் நம்முடைய தேவையின் காரணமாகவே நம்மோடு வந்தடையும். ஆதிக்கால மனிதனின் முதன்மையான கண்டுப்பிடிப்பாக இருப்பது வட்டமும் அதன் அச்சு சார்ந்த சுழற்சியும் என்றால் மிகையாகாது. இந்த வட்டத்தின் பயன்பாடுகள் மட்டும் நம்மை அடையாமல் இருந்திருந்தால் இன்றைய வளர்ச்சியை நம்மால் எட்டிப்பார்க்கவே முடியாது.


வட்டம் என்பது என்ன? ஒரு துகள் ஒரு மையத்தை நோக்கி உள்ள விசையும் மற்றும் மையத்தை விலக்கி செல்லும் விசையும் சமமாக இருக்க அந்த துகள் சுற்றிவரும் பாதை வட்டம் என்று சொல்லலாம். அந்த மைத்திற்கும் துகளுக்கும் உள்ள தூரத்தை ஆரம் என்று சொல்லுகின்றோம். ( வண்டிச்சக்கரத்தின் கைகளை ஆரம் என்றே அழைக்கின்றோம்).

நாடேடியாக வாழ்ந்து வந்த மனிதன் சிறு சிறு கூட்டங்களாக இருப்பிடங்கள் அமைத்து வாழத்தொடங்கினான். இருப்பிடங்களின் தனக்கு தேவையான உணவுகளை சேமித்து வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டான். பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரங்களில் தரையில் போட்டு இழுத்து செல்லும் பழக்கம் இருந்தது. காலம் அவனுக்கு அறிவியல் கற்றுக்கொடுத்தது, இழுத்து செல்லும் பொருள்களுக்கிடையில் சிறு சிறு உருளை கட்டைகளை வைத்து இழுக்கும்பொழுது பளுக்குறைவாகவும் வேகமாகவும் இருப்பதை கண்டுக்கொண்டான். இதுதான் அவன் கண்ட மகிழ்ச்சியான கண்டுப்பிடிப்பு. அவனுக்கு கட்டைகளை எடுத்து வைக்க சிரமாகவும், அதற்காக ஒருவரும் தேவைப்பட்டது. அவனும் சிந்திக்க தொடங்கினான், ஆறாவது அறிவையும் பயன்படுத்த அன்றுதான் பழகிக்கொண்டான். கட்டைகளுக்கு பதிலாக அச்சுகளில் சுற்றிவரும் சக்கரம் ஒன்றை உருவாக்கினான். இதுதான் நம்முடைய காலசக்கரம் ஆரம்பமாக ஆதாரமாக இருந்தது.

எந்த ஒரு நேர் இயக்கங்களும் நம்மை விட்டு கடந்து சென்றுவிடும். ஆனால் வட்டம் சார்ந்த இயக்கம் மட்டுமே ஒர் இடத்தை நோக்கியே இருக்கும். இப்படிப்பட்ட வட்டம் சார்ந்த இயக்கத்தை மனிதன் தன் கைகளில் வைத்துக்கொண்டதன் விளைவாகத்தான். இன்றைய நாகரிகத்தை நம்மால் அடைய முடிந்தது. மனிதனின் இயக்கங்களுக்கு ஆதாரமாக இருப்பதே இந்த வட்டம்தான். நாம் வாழும் பூமியின் சுழற்சி ஆதாரமும் வட்டம்தான் என்பதிலிருந்தே தெரிகின்றது வட்டத்தின் முக்கியத்துவம். தொழிற்புரட்சிக்கு ஆதரவாக இருந்தது இந்த வட்டமும் வட்டம்சார்ந்த இயக்கங்களும்.


ஆர்க்டிக் வட்டம்: பூமி பந்தின் உலக நடுகோட்டில் வடதுருவத்தில் இருப்பதுதான் இந்த ஆர்க்டிக் வட்டம். இந்த பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் குறைவான மக்களே வாழ்கின்றனர். ஆர்க்டிக் வட்டத்திற்கு ஒத்ததாக தென் துருவப்பகுதியை அண்டார்டிக் வட்டம் என்று அழைக்கின்றோம். ஆர்க்டிக் வட்டத்தில் பெரும்பாலும் குளிர்ந்தே காணப்படுவதால் பனிப்பாறைகளாக உள்ளது.(தற்பொழுது பெருகி வரும் உலக வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்).

ஆர்க்டிக் வட்டம் எட்டு நாடுகளை கடந்து செல்கின்றது. ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் உள்ளது. இது பெரும்பாலும் பனிக்கட்டிகளாகவே இருக்கும். ஆர்க்டிக் வட்டம் நார்வே, சுவீடன்,பின்லாந்த், ரஷ்யாவின் சிலபகுதி, கனடா,கிரீஸ்லாந்த்,ஐஸ்லாந்து,ஐக்கிய அமேரிக்கா போன்ற எட்டு நாடுகளை கடந்து வருகின்றது. இப்பகுதிகளில் எண்ணெய் வளங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, November 20, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மேலேயுள்ள சுட்டிகளில் மூடப்பழக்கங்கள் பற்றிக்கொள்ள நம்மை ஆட்கொள்ளும் பயமும் அதன் மீது கொண்ட அறியாமையாலும் வருகின்றது என்பதை பார்த்தோம். அதேபோல் மனிதனிடம் உள்ள அதிகமான ஆசைகளாலும் அதன் மேல் கொண்டுள்ள ஈப்பாலும் மனிதனை மூடப்பழக்கங்களுக்கு கொண்டுச் செல்கின்றது. என்னை பொருத்தவரை எப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் இருக்கின்றது என்று ஆராய்வதை விட ஏன் மனிதனை இந்த பழக்கம் கவ்விக்கொள்கின்றது என்று ஆராயவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தொடர் தொடங்கினேன்.

மனிதனின் அறிவிற்கு முரனாண பழக்கங்கள் ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், சிறியவர் பெரியவர் என பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இருக்கின்றது என்பதுதான் இதில் ஒரு குழப்பம். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அறிவு சார்ந்த விடயமா? அல்லது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வா? என்ற குழப்பங்கள்தான் மீதம் வெளிப்படுகின்றது.

ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக அறியாமல் இருக்கும் வரை இந்த நம்பிக்கையின் நாடியும் அடங்க மறுக்கின்றது. அதே போல் "பயம்" என்பது மனிதனின் வளரும் சூழ்நிலைகளால் வருகின்றனவா? அல்லது பாரம்பரிய செல்களால் கடந்து வந்துள்ளதா? என்ற ஆய்வின் முடிவின் கைகளில் இந்த நம்பிக்கையும் இருக்கின்றது. பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கற்று வருகின்றோம் நாம் அறியா ஒன்றை அறியும் வரை அதன் மேல் உள்ள பயமும் நம்மை விட்டு நீக்கிவிடுவதில்லை. அதனை பற்றி அறிந்த பின் அந்த பயம் மட்டும் மூளையில் பிரதி எடுத்து வைத்துக்கொள்கின்றது. பின்னர் அதேபோல் அல்லது அதனை ஒத்த நிகழ்வுகள் வரும் பொழுது அந்த பயமும் படமெடுக்கின்றது என்பதுதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. எத்தனை சீர்திருத்த வாதிகள் தோன்றினாலும் இந்த மூடப்பழக்கங்கள் அழிந்தபாடில்லை ஏன்?

பெண்களுக்கு கல்வியறிவு வளர்க்க வேண்டும் அப்படி பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான நம் சமூகம் இந்த மூடப்பழக்கங்களிலிருந்து விடுபடும் என்று பெரியார் சொன்னார். உண்மைதான், இன்றை நிலையில் படிக்காத பெண்களை விட படித்த பெண்களிடம் இப்படிப்பட்ட மூடப்பழக்கம் அதிகமாகவும் மிக சாதுர்த்தியமாகவும் இருப்பதை உணரமுடிகின்றது. இந்த நாளில் இந்த விரதம் இருந்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பட்டியல் போட்டுடல்லாவா சொல்லுகின்றார்கள். அப்படியே தன் கணவன் குடுப்பத்தரையுமல்லவா தன்வயப்படுத்தியுள்ளார்கள். இவற்கெல்லாம் அவர்களிடம் உள்ள ஆசைகள்தான் காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன் குடும்பத்தினரிடம் உள்ள பற்று அதுவே ஆசைகளாக வந்தடைவதன் காரணமே இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்துவிடுகின்றது.


இதுவரை கண்டுள்ள ஆசைகளிலே மிக கொடூரமான ஆசைகளா இருப்பது பதவியாசை. ஒருவன் ஒரு பதவியை சுவைத்துவிட்டான் என்றால் அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுதரமாட்டான் என்பதுதான் வரலாறு சொன்ன பாடம். அந்த பதவிக்காக யாகங்கள் வைப்பது, பூஜைகள் செய்வது, ஏன் பலியிடுதல் செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளை பலியிட்டால் நிரந்தரமாக பதவியில் இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டு அதற்காக யாகங்கள் நடத்தவும் செய்கின்றார்கள் என்ற செய்திகளை படிக்கின்ற பொழுது தலையே சுற்றுவதில் ஆச்சரியமில்லை. வயதான பின்னரும் இளம் நங்கையை மணம் முடித்தால் பதவியில் நீண்டு இருக்கலாம் என்று மணம் செய்தவர்களையும் வரலாறு பார்த்துள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது இந்த ஆசைகள்......

இவற்றிலிருந்து பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. அப்படி எல்லொரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்று சொல்லும் மூடப்பழக்கங்களைப்பற்றி தொடர்ந்து வரும் பகுதியில் சிந்திக்கலாம்.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.


Sunday, November 15, 2009

படம் சொல்லும் கதைகள் எனது மற்றொரு பக்கம்

படம் சொல்லும் கதைகள் எனது மற்றொரு பக்கம்


" சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல... அதுபோல படங்கள் பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் சில செய்திகளையாவது சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நான் பார்த்ததும் சுட்டப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசையில் உருவான என் மற்றொரு பக்கம் கண்டதும் சுட்டதும்.

பிடித்திருந்தால் ஊக்கம் கொடுங்கள்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்...


Tuesday, November 10, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மற்ற விலங்குகளை விட மனிதன் சிறப்புமிக்க உயிர். அவனிடன் நல்லது எது? கெட்டது எது? என பகுத்தாய்ந்து செயல்படும் திறன் அவனுக்கு மட்டுமே உள்ளது. ஒருவரின் அறிவுக்கும் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நம்பிக்கை என்பது அறிவு சார்ந்த விடயமா? சென்ற பகுதியில் பின்னூட்டமாக ஷண்முகப்ரியன் ஐயா பின் வருமாறு கூறினார். "
ஷண்முகப்ரியன் said... நம்பிக்கை என்பதே ஒன்றைப் பற்றி முழுக்க அறியாமல் இருக்கும் போது நாம் கொள்ளும் உணர்வு.அறிவுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஞானம். இதனை அறியவே முடியாது என்ற அறிவின் உச்சத்தில் பிறப்பது 'trust'. அறியாமையில் பிறப்பது ‘belief'."

ஷண்முகப்ரியன் ஐயா சொல்வதிலிருந்து ஒன்றைப்பற்றி முழுமையாக அறியாமல் கொள்ளும் உணர்வுக்கு நம்பிக்கை என்றால் அறியாதவற்றை அறிந்துக்கொண்டால் அந்த நம்பிகைகளிலிருந்து விடுபட முடியம் என்பது சரிதானே. அப்படி எல்லாவற்றையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகின்றதா? நம் அறிவுக்கு எட்டிய வரை அறிந்துக்கொள்கின்றோம். அதற்கு அப்பால் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியும் அதற்கான தேடல்களும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது. இந்த தேடல்கள் இருக்கும் வரை நாம் நம் உணர்வில் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும் தொடரும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. தேடல்களும் நின்றுவிட போவதில்லை அதனோடு இருக்கும் நம்பிக்கையும் தொடருமா? என்ற கேள்வியையும் நம்மோடு வைக்கின்றது.

சாதாரணமாக கைகுழந்தைகள் இரவு நேரங்களில் சின்ன சின்ன உடல் உபாதைகளினால் அழுகும். பல வேலைகளின் அந்த குழந்தை ஏன் அழுகின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சமயங்களில் பெரியவர்கள் குழந்தைக்கு கண்திஸ்டி பட்டுள்ளது என்று சொல்லி திஸ்டியை போக்க சுற்றிப்போடுதல் என்ற ஒன்றை செய்வார்கள். இதுபோன்ற சமயங்களில் பகுத்தறிவான தந்தைகள் தடுப்பதில்லை மாறாக எனக்கு நம்பிக்கையில்லை வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் நம்பிக்கைக்காக செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள். எப்படியாவது குழந்தை அழுவது நின்றால் போதும் என்ற ஆசைகளால் ஏற்படும் நம்பிக்கைதான் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கு சமமான மற்றொரு என் இடுகை இதையும் படியுங்கள் கானல்நீர் தேடும் தாகம்... மனிதன் வாழும்
சமூகம் பாசம் பந்தம் என்ற பிணைப்பில் உள்ளது. ஒரு பகுத்தறிவாதி சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தவும் அதனால் ஏற்படும் பாதகங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றான். ஆனால் தன்னை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதற்கு உடன் படாதவனாகின்றான் என்பதை அந்த இடுகை சொல்லும்.

நம்பிக்கையும் மூடநம்பிக்கைகளும் மனிதனின் சமூக கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியவை. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் ஒரு சிலரை மட்டும் வஞ்சிக்கும் விதமாகவும், ஒரு சிலரை மட்டும் பாதிப்புக்கு ஆழ்படுத்துவதும் தான் மிக கொடுமையாக சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட மூடப்பழக்கங்களைதான் பெரியார் போன்ற சமூக சிற்பிகள் எதிர்த்து வந்தனர். சமுக பழக்கங்கள் சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது. அவைகளை அவ்வப்பொழுது உருவாகும் சமுக சிற்பிகளால் கழையப்படுகின்றது. மூடப்பழக்கங்களில் சில இரவில் வேப்பமரத்தில் பேய் இருக்கும் என்றும். இரவில் வீட்டை கூட்டி வெளியில் குப்பையை போட்டால் ஸ்ரீதேவி வெளியில் சென்றுவிடுவாள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இவற்றில் உண்மைநிலை வேறு.


பயம் என்பது மனித உணர்வுகளில் ஒன்றுதான். இதுதான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது. சிறுவயதில் ஏற்படும் சின்ன சின்ன பயம்தான் வளர்ந்த பின் மனிதனை மூடப்பழக்கங்களை எதிர்க்கும் திரணியற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இந்த பயம் இருக்கின்றவரை மனிதன் மனம் ஏதோ ஒன்றை நம்ப தயாராய்கின்றது. சிறுவயதில் பெற்றோர்கள், வளரும் சுற்றுசூழல், பின் அவனின் சமூகம் இந்த பயத்தை கற்றுக்கொடுக்கின்றது. இப்படி ஏற்படும் பயம் மூளையில் பதிய வைக்கப்படுகின்றது. அப்படி பதிந்துள்ள நகல்கள் எதோ ஒன்றுக்கு பொருந்தி பயத்தையும், அதனை சார்ந்த மூடநம்பிக்கைக்கு ஏற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இப்படி ஏற்படும் நம்பிக்கைகளுக்கு அவனிடம் கொண்டுள்ள பகுத்தறிவும் பயனற்றவையாக இருக்கின்றது.

குழந்தைகளின் சூழல் அவர்களின் வளர்ப்பு முறைகளை கட்டுப்படுத்த பெற்றோர்கள் "அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது. அப்படியே செய்யும் சின்ன சின்ன மாற்றங்களும் தற்காலிகமாகவே இருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.

Saturday, November 7, 2009

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு.....

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு....

எப்படியோ பதிவர்கள் சோர்வை போக்கும் விதமாக அவ்வப்பொழுது ஏதாவது ஒரு தொடர் விளையாட்டு வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பதிவர்களும் ஆர்வம் குறையாமல் கலந்துக்கொள்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதில்
எனக்கு இன்னும் கொஞ்சம் சிந்தனைகள் தூண்டும்படியாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணங்கள் உண்டு. அதே போல் ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் தலைப்புகள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் பலரின் பார்வையில் ஒரு தலைப்பின் கீழ் பார்க்கும்பொழுது அதுவும் சிறப்பாகதான் இருக்கு. முதலில் இப்படிப்பட்ட தொடரை தவிற்த்து விடலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் பலரின் கருத்துகளுடன் நம் கருத்து எப்படியிருக்கு என்ற ஆசைகளுடன் நானும் கலந்துக்கொள்கின்றேன்.

நண்பர் உழவன் (Uzhavan) உழவனின் உளறல்கள், வலையுலக தம்பி அன்பு மதி OPEN HEART யும் "தீபாவளி சிறப்பு பதிவு 2009" அழைப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். எனக்கும் தீபாவளிக்கும் உள்ள தூரம் அதிகம் என்றே நினைக்கின்றேன். பொதுவாக திருவிழாக்களில் ஈடுப்பாடு இல்லாதவனாக இருக்கின்றேன் (தற்பொழுது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் இருப்பதுண்டு). எனவே இங்கு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பொய்யாகதான் பதில் சொல்லவேண்டி வரும். இருந்தாலும் சிலது உங்களுக்காக நான்ன்ன்ன்ன்ன்ன்......



1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் இல்லை. நான் நானாக வாழ்ந்துக்கொண்டுள்ள சாதாரணமானவன். திருச்சியிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூரில் வேலைசெய்துக்கொண்டுள்ளேன். பார்த்ததில் உணர்ந்ததில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பூ.....

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
நினைவில் இருக்கும் அளவிற்கு எந்த ஈடுப்பாடும் இல்லை.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சிங்கப்பூரில்,

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
சிங்கப்பூர் அரசு தீபாவளி கொண்டாடும் விதமாக அரசு விடுமுறை அளித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்க அரசு தடையுள்ளது ஆனால் மத்தாப்பு மட்டும் கொழுத்தி மகிழலாம். இங்குள்ள ஒரு பகுதி குட்டி இந்தியா (Little India) தீபாவளி சிறப்புக்காக வண்ணத் தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் பார்க்க சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இந்த அளவிற்கு இந்திய பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது ஒரு மகிழ்ச்சியான விடயம்தான்.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
மன்னிக்கவும், அந்த அளவிற்கு ஈடுப்பாடு இல்லை.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
நண்பர் வீட்டில் கிடைத்த விருந்தில் பலகாரம் சாப்பிட்டேன்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
ஈடுப்பாடு இல்லாததால் தவிற்த்துவிட்டேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் இரவுப்பணி முடிந்ததும் மறுநாள் தூக்கம். முடிந்ததும் நண்பர் அழைப்பில் சிறிது உணவு......

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
வாய்ப்பு கிடைத்தால் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
இப்படியே சென்றால் அடுத்த வருடம் தீபாவளி வந்துவிடும் எனவே என்னோடு முடித்துவிட்டேன்.

அடுத்த விளையாட்டுக்கு அழைத்திருப்பவர்கள்
தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணா அவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி அவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.


1.அரசியல் தலைவர் : வம்பில் மாட்டிக்கொள்ள முடியாது...
கலைஞரிடம் பிடித்தது: தினம் ஒரு அறிக்கையிட்டு தொண்டர்களை அன்பில் கட்டிவைப்பது.
பிடிக்காதது: தினம் ஒரு அறிக்கையிட்டு மக்களை ஏமாற்றுவது.

செல்லி ஜெயலலிதாவிடம் பிடித்தது: அரசியலில் இருக்கும் மன உறுதி
பிடிக்காதது: மக்களுக்கு நல்லது செய்யும் வாய்ப்புகள் இருந்தும் செய்யாத உறுதி


2.எழுத்தாளர்:
எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.

3.கவிஞர்:
மக்களைப்பற்றி சிந்தித்ததால் பட்டுக்கொட்டை கல்யாணசுந்தரம்.

4.இயக்குனர்:
பாக்கியராஜின் திரைக்கதை, இயக்கம் பற்றிய பாதிப்பு எனக்குண்டு.. அதன் வரிசையில் வரும் இயக்கங்கள் பிடிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பதுண்டு. கமல் இயக்கிய விருமாண்டி பட இயக்கம் பாக்கியராஜ் பாதிப்பு இருப்பதாக தெரியும்.

5.நடிகர்:
பிடித்த படத்தில் நடித்த நடிகரை பிடிக்கும். பிடித்த படம் தனியாக சொல்லமுடியவில்லை.

6.நடிகை:
அழகான..........

7.இசையமைப்பாளர்:
பிடித்த இசை தாலாட்டு....... தாலாட்டு இசைப்பவர்

இந்த தொடர் அனேகமாக எல்லோரையும் அடைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு சிலரை அழைக்கலாம் என்ற எண்ணங்கள்

1.வானம் வெளித்த பின்னும் "ஹேமா".

2.உழவனின் உள்றல்கள் "உழவன்"

3.
Globetrotter "மலர்"

4.என் கனவில் தென்பட்டது "நசரேயன்"

5.பின்னோக்கி "பின்னோக்கி"


அன்புடன்
ஆ.ஞானசேகரன்
.

Thursday, November 5, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 7

ஏன்? எதற்கு? எப்படி?..... 7

நிறத்தினாலே உலகம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதை பற்றி எல்லோருக்கும் தெரியும். கருப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பாகுபாடு நிலை இன்றுவரை நின்றபாடில்லை. எண்ணற்ற போராட்டங்கள் இந்த நிறத்தினால் வந்துள்ளது, வந்துக்கொண்டே இருக்கின்றது என்றே சொல்லலாம். ம்ம்ம்ம்... அது சரி நிறம் என்றால் என்ன? அந்த நிறம் அந்த நிறமாக இருக்க காரணம் என்ன?


முதலில் ஒரு பொருள் இருக்கின்றது அது எப்படி நமக்கு தெரிகின்றது? கண்ணிருந்தால் தெரிகின்றது. கண் இருந்தால் மட்டும் போதுமா? அப்படியென்றால் இருட்டில் அந்த பொருள் தெரியவில்லையே ஏன்? ஆக ஒரு பொருள் நம் கண்ணுக்கு தெரியவேண்டும் என்றால் அங்கே ஒளி வேண்டும், அதாவது வெளிச்சம் வேண்டும். உலகில் ஒளியின் முதன்மையான ஆதாரம் சூரியன். மேஜையின் மீது பேனா இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். இப்பொழுது ஒளியானது அந்த பேனா மீது பட்டு எதிரொளிக்கப்படுகின்றது. அப்படி எதிரொளிக்கும் ஒளி நம்முடைய கண்ணை அடையும் பொழுது அந்த பேனா நம் கண்ணுக்கு தெரிகின்றது. அதை மூளை பேனாவாக உணர்த்துகின்றது. இவற்றை பற்றிய மற்றொரு என் இடுகை விளக்கமான விளக்கு...

பேனாவின் மீது படும் ஒளி அதன் விலகல் மற்றும் உட்கவரும் தன்மையை பொருத்து அதன் நிறம் மற்றும் உருவம் தெரிகின்றது. சூரிய ஒளி ஏழு நிறங்களின் கூட்டு ஆனால் நமக்கு வெள்ளை நிறமாக தெரிகின்றது. முதன்மையான நிறம் என்றால் அது சிகப்பு, பச்சை, நீலம். மற்ற நிறங்கள் இந்த மூன்றின் கூட்டு சேர்க்கைகளால் ஆனவை. மேலும் முக்கிய நிறங்கள் ஏழு ஆகும் அவை 1.சிகப்பு 2.ஆரஞ்சு 3.மஞ்சள் 4.பச்சை 5.நீலம் 6.இண்டிகா(இளநீலம்) 7. ஊதா என்பன.

இந்த எழு நிறங்களின் கூட்டு வெள்ளையாக இருக்கும். இவற்றை பின் வரும் படத்தில் உள்ளது போல ஒரு வட்ட வடிவ அட்டையில் ஏழு நிறங்களையும் சமபாகங்களாக வரைந்துக்கொண்டு மையத்தில் துளையிட்டு பென்சிலால் வேகமாக சுற்று, இப்பொழுது வெள்ளை நிறமாக தெரியும். ஆக நிறங்களின் கூட்டு என்பது வெள்ளையாக இருக்கும். கருப்பு என்பது நிறமே இல்லை என்றே சொல்லலாம்.
(படம்)

இப்பொழுது மேஜையில் மீது உள்ள பேனா சிகப்பாக தெரிகின்றது என்று வைத்துக்கொண்டால் அந்த பேனா சிகப்பாக தெரிவதற்கு காரணம் என்ன? வெள்ளை நிற ஒளி பேனாவின் மீது பட்டு எதிரோளிக்கும் பொழுது எல்லா நிறங்களையும் அந்த பேனா உட்கவர்ந்து கொண்டு சிகப்பு ஒளியை மட்டும் வெளியிடுகின்றது. அப்படி வெளியிடும் ஒளி நம் கண்ணை அடையும் பொழுது அது சிகப்பாக தெரிகின்றது. எல்லா ஒளியையும் வெளியிட்டால் அது வெள்ளையாகவும், எல்லா ஒளியையும் உட்கவர்ந்து கொண்டால் அது கருப்பாகவும் தெரியும். ஒருவர் வெள்ளையாக இருந்தால் உண்மையில் அவர் எந்த நிறத்தையும் உட்கவரவில்லை என்றுதான் அர்த்தம். எல்லா நிறங்களையும் தனக்குள் வைத்துள்ளவர்கள்தான் கருப்பாக இருக்கின்றனர். உடல் கருப்பாகவும் மனம் வெள்ளையாகவும் உள்ளவர்களே சிறப்பானவர்கள் என சொல்லலாமா!

ஆக நிறம் என்பது ஒரு பொருளினால் வெளியிடப்படுகின்ற, தெளிக்கப்படுகின்ற, கடத்தப்படுகின்ற ஒளியின் காட்சி பதிவு என கொள்ளலாம். அதே போல் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அலை நீளம் மற்றும் அதிர்வெண்கள் உண்டு அதை பொருத்துதான் அந்த நிறம் கடக்கும் தூரம் அமையும் அதைப்பற்றி பின்னொரு நாளில் பார்க்கலாம். மற்றொரு சிந்தனைக்கான கேள்வி அந்த நிறம் மற்றும் பொருளை மூளை எப்படி நிச்சம் செய்கின்றது?

மூளை அந்த பேனாவின் நிறம் சிகப்பு என நிச்சயம் செய்துவிட்டது. அதனால்தான் அந்த பேனாவின் நிறம் சிகப்பு என்று நாம் சொல்லுகின்றோம். அப்படி அந்த பேனாவின் நிறம் ஒருவருக்கு சரியாக தெரியாவிட்டாலும் அல்லது எல்லாமே ஒரே நிறமாக தெரிந்தாலும் அவற்றுக்கு நிறக்குருடு என்று சொல்லுகின்றோம். நிறக்குருடு மறபணு அடிப்படையினால் ஏற்பட்டாலும்
சில சூழல்களில் மூளை,நரம்பு அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதியல் பொருள்களினாலும் ஏற்படுகின்றது. இரவு பணி அதிகம் பார்ப்பவர்களுக்கும் இந்நோய் வர வாய்ப்புள்ளதாகவும் சொல்லுகின்றார்கள். நிறக்குருடு குறையுள்ளவர்கள் சிலரால் நன்மைகளும் இருக்கின்றது. ஒரே நிறத்தை பார்ப்பவர்களாக உள்ளதால் குழப்பம் இல்லாமல் குறிபார்த்து சுட முடியும் அதே போல் இருட்டில் இருப்பவர்களை எளிதில் உணரவும் பார்க்கவும் முடியும். {கண்டிப்பாக நிறகுருடு உள்ளவர்கள் வாகனம் ஓட்ட கூடாது}.

மஞ்சள் நிறத்தின் அலை நீளம் மற்ற நிறங்களின் அலைநீளதிற்கு இடையில் உள்ளதால் மஞ்சள் நிறம் சுழபமாக கண்ணுக்கு தெரியும். அதனால் முக்கிய அறிவிப்பு பலகைகள் மஞ்சள் நிறத்தில் வைப்பார்கள். சோர்வாக இருப்பவர்களுக்கு அதனால்தான் பார்க்கும் பொழுது பார்வை மஞ்சளாக தெரியும் என்பார்கள்.

ஒரு வயதான தாத்தா ஒருவர் டாக்டரிடம் சென்று "டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் மஞ்சளாகவே தெரிகின்றது ஒரே கலைப்பாக உள்ளது என்றார்" அதற்கு டாக்டர் "நல்லா சாப்பிட்டாயா " என்று கேட்டார். "சாப்பாடுதான் சரியாக சாப்பிட முடிவதில்லை" என்று தாத்தா சொன்னார். "யூரின் நன்றாக போகின்றதா? " என்று டாக்டர் கேட்டதும் தாத்தா " ம்ம்ம்ம் நன்றாக வெள்ளையாகதான் போகின்றது" என்றார். "பார்கின்றதெல்லாம் மஞ்சளா தெரியுதுனு சொன்னாயே யூரின் மட்டும் எப்படி வெள்ளையா தெரிந்தது" என்று டாக்டர் கேட்டதும் தாத்தா குழம்பியே போய்ட்டார்....(சும்மா ஒரு காமடிதான்)


மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.



Monday, November 2, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

நிலாவில் அவ்வை பாட்டி வடை சுடு்ம் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, இன்று
"இந்தியா" சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பி நிலவில் நீர் உள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும். அப்படி இருந்தால் உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்ற கண்டுபிடிப்பும் நம்மை பிரமிக்க செய்கின்றது. மேலும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் மேல் உண்டாகிய மோதல் மூலம் நீர் நிலைகள் அதிகம் உள்ளதாக உறுதிப்படுத்தியும் உள்ளது.
அறிவியலில் சாதனைகள் செய்கின்ற அதே மானிட சமுகத்தில்தான் பகுத்தறிவுக்கு முரண்பாடான நம்பிக்கைகளும் நிரம்பியுள்ளது. ஒருவரின் நம்பிக்கை அவரின் முழு தனிமனித சுதந்திரத்திற்கு தடையில்லை என்பதும் உண்மை. அதே சமயம் அந்த நம்பிக்கை மற்ற உயிர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்பொழுது வன்மையாக கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றது. மூடப்பழக்கங்களிளேயே என்னை பொறுத்தவரை மிக மோசமானது பலியிடுதல். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என சாகடித்தல். தலச்சன் பிள்ளையை குலதெய்வத்திற்கு பலியிட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கைகளும் நம்மை நடுங்க வைக்காமல் இருக்க முடியாது. பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றியும் இன்னும் நம்மிடையே துடைத்தெரிய வேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இருக்கும் இடைவெளி சிறிதுதான். நன்றாக படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. படிக்கின்றபொழுது மிட்டாய் சாப்பிட்டால் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்பது அறிவுக்கு முரண் பாடான நம்பிக்கை. இதில் மிட்டாய் சாப்பிடுதல் என்பது ஒரு செயல் அதை செய்தால் நன்றாக படிக்கலாம் என்பது ஒரு தூண்டுதல்தானே தவிர அதுதான் உண்மை என்பது இல்லை. அதுபோலதான் சாமி கும்பிடுதலும். சாமி கும்பிட்டால் நன்றாக படிக்கலாம் என்பதும் ஒரு தூண்டுதல்தான் அதுவே காரணமாக இருக்காது. ஒரு நம்பிக்கையானது அது மூடநம்பிக்கையாக இருந்தலும் சரி அது பிறரை பாதிக்காத வரை அந்த நம்பிக்கையை சரி என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி இன்று எல்லோரிடமும் உள்ளது. அப்படிபட்ட நம்பிக்கைகள் இன்று உலகெங்கிலும் பரவலாக உள்ளது.

தனிமனித நம்பிக்கையாக இருந்தாலும் அந்த மூடநம்பிக்கையால் அறிவு மழுங்கடிக்கப்பட்டு நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதை நாம் கண்முன் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் மனிதனிடையே
துடைத்தெரிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் பலரின் வாதம்.

பகுத்தறிவு என்றால் என்ன? மூடப்பழக்கங்கள் தோன்றுவது எதனால்? எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை "புரோகிதர் வேதம் சொல்லும்பொழுது பூனையை கட்டிப்போடுதல்". ஒரு புரோகிதர் தன் சீடர்களுடன் வேதம் சொல்லிக்கொண்டிருந்தார், அப்பொழுது அங்கு அவர் வளர்த்த பூனை அங்குமிங்கும் போய்கொண்டு தொந்தரவாக இருந்தது. உடனே புரோகிதர் சீடர்களிடம் அந்த பூனையை கட்டிப்போட சொன்னார். மறுநாள் சீடர்கள் புரோகிதர் வேதம் சொல்லும் முன்பாகவே பூனையை கட்டிப்போட்டார்கள். இப்படியே நாட்கள் ஓடியது புரோகிதர் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கு ஒரு புதிய புரோகிதர் வந்தார் சீடர்களிடம் "முன்பு இருந்தவர் எப்படி வேதம் சொல்லுவார்" என்று சீடர்களிடம் கேட்டதும் "வேதம் சொல்லும் முன் பூனையை கட்டிப்போட வேண்டும்" என்று சொன்னதும் அதுவே நடைமுறையாக்கப்பட்டது.

இரண்டு அணிகள் விளையாட தயாராகின்றது முதலில் கள‌த்தில் இறங்கும் அணி எது? நாணயத்தை சுண்டி பூவா? தலையா? பார்க்கப்படுகின்றது. கண்டிப்பாக பூவோ தலையோ விழும் என்பதுதான் உண்மை. இதில் ஆட்டத்தை கட்டுப்படுத்துவது அந்த நாணயமாக இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதில்தான் பகுத்தறிவாக இருக்க முடியும்.

பயமும் எல்லையில்லா ஆசைகள்தான் மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்து விடுகின்றது. நினைத்ததை அடைய வேண்டும் என்ற எண்ணம். அதுவும் நமக்கே விரைவாக கிடைக்கப்பட வேண்டும் என்ற ஆசைகள்தான் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைக்கு மனம் சென்றுவிடுகின்றது. அதே போல் விஞ்ஞான வளர்ச்சிகளும் நின்றுவிடவில்லை. மனிதன் கண்டுபிடிப்புக்கு அப்பாற்பட்டதை அறிய ஆசைப்படுகின்றான் அதை அறியாதவரை அவற்றை ஒரு மாய சக்தியாக நினைத்துகொள்கின்றான்.

ஆதிகாலம் கொண்டே மனிதனின் பயமும், ஆசைகளுக்கும் காரணமான மூடப்பழக்கங்கள் இன்றும் நின்றுவிடவில்லை, கொஞ்சம் குறைக்கபட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய அழிகப்பட்டதாக கொள்ளமுடியாது. மனிதனின் தனித்தனி குழுக்கள் தனித்தனி சமுக அமைப்பாக இருக்கின்றது. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு கலாச்சரங்களும் உள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழங்கங்கள் இந்த கலாச்சார நிகழ்வுக்குள் பதுங்கி இருப்பதால் அவைகளை பிரித்தெடுப்பது மிக மிக கடினமான ஒன்று.

பெரியார் வாழ்வில் கண்ட ஒரு நிகழ்வு, பெரியார் மலேசியா நாட்டிற்கு வருகை புரிகின்றார். ஒரு பெரிய மகான் வந்துள்ளார் என்று மக்கள் கூடுகின்றார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி "சாமி எனக்கு பிள்ளை வரம் கொடுங்கள்" என்று கேட்கின்றார். அதற்கு பெரியார் " பிள்ளையே இல்லாத என்னிடம் பிள்ளை வரம் கேட்கின்றாய் இந்தியாலிருந்து வரும் பொழுது எல்லா மூடப்பழக்கத்தையும் விட்டுவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் நீங்கள் மொத்தமாக மூட்டை கட்டி எடுத்து வந்துள்ளீர்கள்" என்று நகைச்சுவையாக கூறுவார். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இப்படிப்பட்ட பழக்கங்கள் பொதிந்து உள்ளதை காணமுடிகின்றது.

பெரும்பான்மையான மூடப்பழக்கங்கள் மதங்களிலும் அதில் அறிவுறுத்தும் அறிவுரைகளால் ஆரப்பமானது என்றாலும் பல நம்பிக்கைகள் ஆசைகளாலும் பயத்தாலும் ஆனது என்பதை உணரமுடியும். மனிதனின் மனம் மென்மையானது அவனின் நம்பிக்கையும் அவனின் மனதை பொருத்தே அமைகின்றது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக ஏற்றுகொள்ள மனம் தடுமாறும்பொழுதுதான். மனம் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாக்கபடுகின்றது. இது மனம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் தெளிவான ஆய்வு தேவைப்படுகின்றது. மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். ஆரம்பத்தில் அறிவுரைக்காக எனக்கொண்டாலும் போக போக அதுவும் ஒரு சடங்காக மாற்றியமைக்கப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூறுதல் எந்த வகை பகுத்தறிவை சாரும். ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது அவற்றை உடைத்து எறிந்துவிடுகின்றோம். அந்த இயந்திரத்தை நினைவிலா வைத்துக்கொண்டுள்ளோம்?... பகுத்தறிவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்கப்படும்பொழுது அந்த பழக்கங்களும் பின்னாளில் மூடப்பழக்கமாகத்தான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள்.

தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பின்னாளில் அவற்றின் மீது நம்பிக்கை பொய்யானது என்று சொல்லி வெளிவருவதுமுண்டு அதேபோல் தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள் பின்னாளில் ஆத்திகராவதுமுண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நினைத்தது நிறைவேறாத காரணம்தான். அப்படி நாம் நினைத்ததை நிறைவேற வேண்டும் என்றால் ஏதோ ஒன்றில் நம்ம்பிக்கையை வைக்கின்றார்கள். அந்த நம்பிக்கைதான் தொடர்ந்து வரும் மூடநம்பிக்கையாக இருக்கின்றது.

ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு காரணத்தால் கட்டியாளப்படுகின்றது. அந்த கட்டியாளப்படும் காரணிகள்தான் நாளாடைவில் நம்பிக்கையாகவும் பின்னர் மூடநம்பிக்கையாகவும் வந்துள்ளது. மனம் என்பது வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்ற வகைப்படுத்தி சொல்வதுண்டு. வெளிமனம் என்னதான் பகுத்தறிவுகளை பேசினாலும் உள்மனமும், ஆழ்மனமும் நம்மை நக்கல் செய்துக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சின்ன சின்ன விடயங்களை பற்றி பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம்....

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.